Saturday, August 18, 2012

en ninaivugalin e -pathivu --metro train--ideo

சென்னையில் மெட்ரோ ரயில் போடலாம் என கடப்பாறையை எடுத்தாலும் எடுத்தார்கள், டோட்டல் சென்னையே திக்குமுக்காடிப்போயிருக்கிறது.

  திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயிலின் ஒவ்வொரு ப்ரகாரத்தையும் அடிப்பிரதக்ஷனம் செய்துவிட்டு வரும் நேரத்தைவிட 1400 cc காரில் அமுக்கோ அமுக்கென்று அமுக்கினாலும் அஷோக் பில்லரிலிருந்து வடபழனி சிக்னலை வந்தடையும் நேரம் அதிகம்.

 கிண்டி அலெக்ஸாண்டர் ஸ்கொயர் சைதாப்பேட்டை இங்கெல்லாம் காரில் இருந்தபடி முடிவெட்டும் சலூன், சட்டையைக் கழட்டிக்கொடுத்தால் பானெட்டின் மேல் வைத்து இஸ்திரி செய்து கொடுப்பது, ஆர்டர் எடுத்துக்கொண்டு போய் பருப்பு வாங்கி பொங்கல் செய்து காரில் கொண்டு வந்து சுடச்சுட செர்வ் செய்வது போன்ற பலப்பல மொபைல்/இம்மொபைல் ஐடியாக்கள் தோன்றுகிறது.


மெட்ரோ ரயில் ஓய்யாரமாக ஓட ஆரம்பித்தவுடன் அதில் செல்லப்போவது யார் என்று இன்னும் யாரும் முடிவு செய்யவில்லை. பயணச்சீட்டு விலை ஏ.சி. பஸ்ஸுக்கு நிகராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ஏ.சி. பஸ்களின் "தினசரி சவாரிக்கள்" ஐ.டி கம்பெனியின் கழகக் கண்மனிகளும், கொஞ்சம் மூச்சுவிடும் நடுத்தர வர்கத்தினரும் மட்டுமே.
 
  சென்னையின் குறுகிய சாலைகளில் குறுக்கே ஓடும் பைக்குகளுக்கு நிகராக கார்கள் அதிகம் பார்க்கத்துவங்கியிருக்கிறோம். கடந்த பதினைந்து வருடங்களாகவே ஏறுமுகத்தில் இருந்தாலும், சமீப காலத்தில் கார்கள் பன்மடங்கு விற்கத்துவங்கியுள்ளன. ஒன்னரை லட்சத்து நேனோ, மூன்றேகால் லட்சத்தில் ஆல்டோ, நாலேகாலுக்கு ஐ10, ஐந்தரைக்கு ஃபிகோ, ஆறே முக்காலுக்கு ஸ்விஃப்ட் என்று லட்சம் கார்கள் இந்தப்பக்கமும், அந்தப்பக்கம் 8.75 % ஸ்டேட் பாங்கும், 11.75% லிருந்து 12.75% வரை ஐசிஐசிஐ முதலான வங்கிகளும் அனிவகுத்து நிற்க, கையிலிருந்து ஒரு பைசா கொடுக்காமல் ஏ.சி போட்டுக்கொண்டே காரை திரும்ப ஓட்டி வரலாம். மாதக் கடைசியில் சம்பளம், ஐயப்பன் கோயிலில் சந்தனத்தை உள்ளங்கையில் கொஞ்சூண்டு குச்சியை வைத்து தேய்த்துவிடுவார்களே, அந்த மாதிரிதான் எல்லாப் பிடித்தங்கள் போக வரும்.

அதுமட்டுமல்லாது,  நாலு பேர் செல்லக்கூடிய காரில் ஒருவர் மட்டும் அலுவலகம் செல்வது டைட்டானிக் கப்பலின் லைஃப் போட்டில் டிக்காப்ரியோவை ஏற்றிச் செல்லாத உவமைக்கு ஒப்பாகும்.

மெட்ரோ ரயிலில் பயணித்தால், கார் இன்ஸ்டால்மெண்ட் + பெட்ரோல் செலவைவிட குறைவாகவே ஆகும் என்று உணர்ந்தால் நல்லது.

சாலைகளில் கார்த்தடங்கள் குறையும். இடம் கிடைக்கும். பெட்ரோல் செலவு குறையும். பெட்ரோல் தட்டுப்பாடு குறையும். நேரம் மிச்சமாகும்.



அதுசரி, பூமிக்கு அடியிலும் மேலும் செல்லப்போகும் இந்த ரயிலினால், சென்னையின் தினசரி போக்குவரத்து சீரடையுமா ? மூக்கில் இன்னொரு துளையிட்டால் ஆஸ்துமா குணமாகுமா ? அனேகமாக இரண்டுக்கும் ஒரே விடைதான்.

இதோ அடுத்த வருடம் ஓட ஆரம்பிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும் என்ற முக்கியமான கேள்விகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, இந்தியப் பிரஜைகளின் ஜனநாயகக் கடமையான "நம்பிக்கை"யை மட்டும் வருங்காலத்தின்மீது வைப்போம்.

நம்பினோர் கைவிடப்'படார் !'

No comments:

Post a Comment