Saturday, June 1, 2013

enninaivugalin e-pathivu.....vaali write about T.M.S.

பனிப் பெட்டியில்
படுத்திருக்கிறது....
நெற்றி
நெடுகத்--
திண்ணூறு  பூசிய
தொண்ணூறு!
*********
அது
கண்ணூறு
படுமளவு---தினம் தினம்
பண்ணூறு
பாடிய நிலவு:
இன்று அது
இவ் அம்புவிமீது--
பற்றுக் கொண்டது போதுமெனப்
பெற்றுக் கொண்டது செலவு!
*****
சரீரத்திலிருந்து தான்
சாரீரம் பிறக்கிறது:
ஆனால்
அதிசயம் யாதனில்--
சாரீரம் இருக்க
சரீரம் இறக்கிறது!
****
அதற்கு  காரணம்
அவனது கானங்களைக்
காற்று- தன்
கணினியில்
பதிவிறக்கம் செய்து
பத்திரமாய் வைத்திருக்கிறது--
ஒரு
நோன்பு போல்
நோற்று:அன்னணம்
நோற்ற காற்று  முன்
தோற்று நிற்கிறது  கூற்று!
****
பாட்டிருக்கப்
பாடகன் போனான் என்று...
ஊர் அழுகிறது:
உறவு அழுகிறது;
ஓர்
ஓரமாய் உட்கார்ந்து கொண்டு..
வல்லினம்
மெல்லினம் அறிந்து --யாரினி
தன்னை உச்சரிப்பாரென்று
தமிழ் அழுகிறது!
****
ஒவ்வோர் எழுத்திற்கும்
ஒலி அளவை எடுத்தோத..
மாத்திரை உண்டு: அவன் பாடினான்
மாத்திரை கண்டு:அவ்வாறு
மாத்திரை கண்டு பாடியவனின்
யாத்திரை கண்டு.....
அம்மவோ!
அழாமல் என்செய்யும் தமிழ்?
அரும்பி நிற்கிறது
அதன் கண்ணில் நீர்க் குமிழ்!
****
எம்.ஜி,ஆர்---மூன்றெழுத்து
சிவாஜி------மூன்றெழுத்து
ஜெமினி---மூன்றெழுத்து
எஸ்.எஸ்.ஆர்---மூன்றெழுத்து
இத்துணை மூன்றெழுத்துகளுக்கும்
இடம் கொடுத்து....

தன் தொண்டையில்--
ஒருசேரக் குடி வைத்திருந்த
ஒரே மூன்றெழுத்து   டி.எம்.எஸ்.
இது--
உண்மைதானே? என்று -மக்களை
உசாவினால்....

ஆமாம்!ஆமாம்! என்று வரும்
ஆயிரம் ஆயிரம் எஸ்.எம்.எஸ்.!
***

ஆரே மறக்க வல்லார்
அவனது-
தொண்டை ஆற்றிய
தொண்டை?
****
வெண்கலக் குரல்
வேந்தே!-உனை எண்ணி
வடித்தும் வடித்தும்--என்
விழிநீர் நிற்கிறதே  மீந்தே!

என்
விரல் வழி
இறங்கிய தமிழ்--உன்
குரல் வழி
இறங்கியதும்...
நான் இறவாதவனானேன்;
நன்றி மறவாதவனானேன்!
***
அய்ம்பத்தாறு
ஆண்டுகளுக்கு முன்னால்...
அடியேனை நீதான்
அழைத்துவந்தாய் சென்னை;எனை
ஆதரித்த நீ
ஆண் வேடமிட்ட அன்னை!
***
இன்றும் என்றும் இருக்கிறாய் நீ....
அன்புசால்
அண்ணனே!--என்
உணவில்  உப்பாய்;
உதிரத்தில் வெப்பாய்!