Friday, December 13, 2024

Friday, September 6, 2024

Enninaivugalin epathivu

 இலக்கியத்தில் அறம்


வே. முத்துலெஷ்மி

ஆசிரியை ஓய்வு

பிளாட் நம்பர் 38

கமலதளம்

வி.ஜி.பி. செல்வா நகர் விரிவு

முதல் குறுக்குத் தெரு

வேளச்சேரி

கைபேiசி : 7358272050

மின்னஞ்சல் : dhanvin.akshpearl@gmail.com

அக்கால மக்கள் அறம் என்பதை ஒரு கொள்கையாகவோ ,கோட்பாடாகவோ,

சமயமாகவோ, கருதாமல் வாழ்க்கை நெறியாகவே கருதி போற்றினார்கள். ஒழுக்க

நெறிக்குரிய விதிமுறைகளின் தொகுப்பாகவே அறம் கருதப்பட்டது.

ஔவையார் 'அறம் செய விரும்பு' என்கிறார்.

அற ஒழுங்கு ஊரை ஆளும் என்பது பழமொழி. அற ஒழுக்கத்தின்படி

நடந்தவர்களை நாடு போற்றும். வாழ்க்கை முழுமை பெற வேண்டுமானால்

அறத்துடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என தமிழ் இலக்கியங்கள்

குறிப்பிடுகிறது.

ஔவையாரின் படைப்புகள் அனைத்தும் அறத்தையே போதிக்கின்றன.

சிறுவர்க்கு அறிவுரையாக விளங்கும் 'ஆத்திசூடி' அறநூலை பாடி இருக்கிறார்.

சிறு பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற தொடக்க நூலாக 'ஆத்திசூடி'

அமைந்துள்ளது.

ஆத்திசூடியில் 'ஒளவியம் பேசேல்' என்ற ஓளவையார், கொன்றை

வேந்தனில் 'ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு' என்று அதன் விளைவையும்

விளக்கினார்.

ஒளவையார் பாடிய மற்றோர் அறநூல் ‘நல்வழி’யாகும்

ஔவையார் 108 பாடல்களை ஆத்திசூடியில் பாடியுள்ளார். அவை

ஒவ்வொன்றும் அறம் நிறைந்தவை.

இரு நோக்கத்தில் பாடியுள்ளார் ஔவையார். ஒன்று நல்லது. இன்னொன்று

கெட்டது.

கெட்டவற்றைக் குறிப்பிடும்போது ஔவை பயன்படுத்தும் சொற்கள்,

'விரும்பேல், பேசேல், அகற்று, ஒழி, இகழேல், பகரேல், சொல்லேல், நில்லேல்,


மறவேல்' இப்படியான பதங்களைப் பயன்படுத்துகிறார். இவை ஒவ்வொன்றும்

ஆழமான பொருள் வேறுபாடுடையவை. கெட்டவற்றைக் கைக்கொள்ளாதே என்கிற

ஒரே நோக்கத்தில், பயன்படுத்தப்பட்டவை.

எடுத்துக்காட்டாக,

நன்றி மறவேல்

வஞ்சகம் பேசேல்

ஔவை கூறிய கெட்டவற்றை அகற்றவில்லையெனில், வாழ்க்கை

அகன்றுவிடும்.

இதைப்போன்றே நல்லனவற்றைப் பின்பற்றுவதற்கும் வரிசையாகச்

சொற்களை அடுக்குகிறார்.

விரும்பு, கேள், முயல், திருந்தச்செய், சேர், பேண், கடைப்பிடி, வாழ், நில்

இப்படி…

அறம் செய்ய விரும்பு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பதினோறு நூல்கள் அறத்தையே

மக்களுக்கு புகட்டுகின்றன.

கடுஞ் சினத்த கொல் களிறும்

கதழ்பரிய கலிமாவும்

நெடுங் கொடிய நிமிர் நேரிடும்

நெஞ்சுடைய புகழ் மறவரும் என

நான்குடன் மாண்டதாயினும் மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்...

எனும் புறநானூற்றுப் பாடலில் மன்னன் யானை, குதிரை ,தேர், காலாட் படை என

பல படைகளை வைத்திருந்தாலும் அரசியல் நடத்தும் நிலையில் அறநெறியைக்

கடைப்பிடிக்க வேண்டும். அரசியலுக்கு 'அறமே அடிப்படை' என்ற கருத்தினை பெற

முடிகிறது.

கற்பு, அன்பு, அருள், மக்கள் நலன், பசிப்பிணி நீக்குதல், மனிதநேயம்,

கள்ளாமை, கொல்லாமை, வாய்மை, விருந்தோம்பல், கல்வி தருதல், குளம்

வெட்டுதல், போர் நெறி முதலிய அறக் கோட்பாடுகளை ஐம்பெரும் காப்பியங்கள்

வலியுறுத்துகின்றன.

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழியை வைத்து அதனோடு

தொடர்புடைய நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டி அறத்தை வலியுறுத்தும் தன்மையில்

பழமொழி நானூறு அமைந்துள்ளது.

உறக்கும் துணையதோர் ஆலம் வித் தீண்டி


இறப்ப நிழற் பயந் தாஅங்கு - அறப்பயனும்

தான் சிறிதாயினும் தக்கார் கைப் பட்டக்கால்

வான் சிறிதாப் போர்த்து விடும்.

விரலால் கிள்ளி எடுக்கும் அளவே உள்ள ஆலம் விதை வளர்ந்து ஓங்கி

தழைத்து மிக்க நிழலைத் தருவது போல அறப் பொருள் சிறியதாயினும் தகுதி

உடையவர் கையில் சேர்ந்தால் அதன் பயன் வானினும் பெரிதாக விளங்கும் என

விளக்குகிறது நாலடியார்..

நாலடியார் அறத்துப் பாலில், துறவுநெறி அறங்களும், இல்லறநெறி

அறங்களும் காணப்படுகின்றன.

நாலடியார், மக்கள் வாழ வேண்டிய பாங்கினைச் சொல்வதுடன், கல்வி

சிறப்பையும், கற்க வேண்டியதின் அவசியத்தையும், வலியுறுத்துகிறது. சான்றோர்

இயல்பையும், பெருமையையும், பண்பிலார் இயல்பையும் பட்டியலிடுகிறது.

பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அளித்தல் சான்றவர்க்கு

எல்லாம் கடன் என்று நல்லாதனார் கலித் தொகையில் குறிப்பிடுகிறார்.

வாய்மையையே பெரிய அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்பதனை

வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்

பொய்யாச் செந் நா தெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர் நாளும்

என புறப் பாடலில் குறிப்பிட்டுள்ளார் சாத்தனார்.

பீடு இல் மன்னர் புகழ்சி வேண்டிச்

செய்யா கூறிக் கிளத்தல்

எய்யாது ஆகின்று எம் சிறு செந் நாவே

என்கிறார் வன்பரணர்.

பின்னால் அறம் செய்யலாம் என காலம் தாழ்த்த வேண்டாம். இப்போதே

அறம் செய்க என்றுரைக்கும் பாடல் இதோ..

மற்றறிவாம் நல்வினையாம் இளையோம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்

முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு.

நான்மணிக்கடிகை கூறுவது :

கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் சொல் கூற்றம்


மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்

அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்: கூற்றமே

இல் இருந்து தீங்கு ஒழுகுவாள்.

மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் வழி காட்டும் நூல்

திரிகடுகம். ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக் கருத்துகள் சொல்லப்

படுகின்றன.

வறுமையில் துன்பப்பட்டவர்க்கு அவர் விரும்பும் பொருட்களைக்

கொடுப்பதால் உண்டாகும் புகழும், வறுமையால் தளர்ச்சி ஏற்பட்ட போதும் தன்

குடிக்கேற்ற இயல்பினின்று குறையாத தன்மையும், நாள்தோறும் அன்பு மிகுந்து

நட்பினரைப் பெருக்கிக் கொள்ளுதலும் ஆகிய இம்மூன்றும் கேட்கப்படும் அறங்கள்

பலவற்றிலும் சிறந்தவையாகும்.

‘அலர்ந்தார்க் கொன்று ஈந்த புகழும் துளங்கினும்

தன்குடிமை குன்றாத் தகைமையும் – அன்போடி

நாள்நாளும் நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றும்

கேள்வியுள் எல்லாந் தலை.’

என்கிறது திரிகடுகம்.

கொல்லாமை பொய்யாமை புலால் உண்ணாமை களவு செய்யாமை இவை

நான்கும் மக்கள் வினையைத் தீர்க்கும் வலிமை படைத்தன என்கிறது சிறு பஞ்ச

மூலம்.

பொருள் உடையான்கண்ணதே போகம் அறனும்

அருள் உடையான்கண்ணதே ஆகும் அருள் உடையான்

செய்யான் பழி பாவம் சேரான் புறமொழியும்

உய்யான் பிறன் செவிக்கு உய்த்து

என்கிறது சிறுபஞ்ச மூலம்

வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்மை

குறிப்படறல் தீச் சொற்களோடு--மொழிப்பட்ட

காய்ந்து விடுதல் களைந்துயக் கற்றவர்

ஆய்ந்து விடுதல் அறம்.

என்கிறது மற்றுமொர் சிறு பஞ்ச மூலப் பாடல்.

செயலுக்கு அடிப்படை எண்ணம். அந்த எண்ணம் தூய்மையாக அமைய

மனம் மாசு இல்லாமல் இருக்க வேண்டும். மனத்திலுள்ள மாசைப் போக்க

முயல்வதே அறம்.

இதையே வள்ளுவர்


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற..

என்கிறார்.

திருவள்ளுவர் அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தின் மூலம் உலக மக்கள்

அனைவரும் சாதி மதம் இனம் கடந்து குறளின் அடிநாதமே அறம் என்பதை

தெளிவாக்கி விடுகின்றது.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வா யெல்லாஞ் செயல்.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறநெறிப்படி வாழ்வை நடத்துபவன் எப்படி இருப்பான் என்பதைக் கூறும்

ஏலாதி பாடல்:

பல்லுயிர்க்கும் தாய்:

நிறையுடைமை நீர்மை உடைமை கொடையே

பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை

வேயன்ன தோளாய் இவை உடையான் பல்லுயிர்க்கும்

தாய்அன்னன் என்னத் தகும்.

இலக்கிய உலகில் நாலடியார் சிறந்ததோர் அற இலக்கியமாக விளங்குகிறது.

வைகலும் வைகல் வரக் கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்

வைகலும் வைகல் தம் வாழ்நாள் மேல் வைகுதல்

வைகலை வைத்துணராதார்.

என்கிறது நாலடியார்.

மேலும்

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது

பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி

ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்

மருவுமின் மாண்டார் அறம்.

இறப்பு இன்று வருமோ அன்று வருமோ என்று வருமோ என்று நினையாமல்

எமன் பின்புறத்திலேயே நிற்கிறான் என எண்ணித் தீய செயல்களை விட்டு

விடுங்கள். முடிந்த வரை மாண்புடையார் போற்றிய அறத்தை செய்யுங்கள் .


என்றும் நாலடியார் கூறுகிறது.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்ற

நாவல் பெண்ணின் பெருமையைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், சிறந்த ஆண்;

சிறந்த பெண், குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தமிழ் சமுதாயத்தின்

அறவழியில் நின்று பேசுகிறது.

முடிவுரை

உயிர் இன்றி உடம்பு எவ்வாறு இயக்கம் பெறாதோ அதைப்போல தமிழ்

இலக்கியங்களில் அறக்கோட்பாடுகள் இன்றி அவனி நிலை பெறாது என்பதை

உணர்ந்தே நம் முன்னோர்கள் தமிழ் இலக்கியங்களில் அறத்தை ஆங்காங்கு

வகுத்தும் தொகுத்தும் அளித்துள்ளனர்.

இலக்கியத்தின் வாயிலாக அக்கால மக்கள் கண்ட அறம், பழக்க

வழக்கங்களாலும், நீதியாலும், கடமையுணர்வாலும், ஒழுக்கத்தாலும், ஈகையாலும்,

கொடையாலும், வளர்ச்சியடைந்து பரந்துள்ளதை மேற்கூறிய கட்டுரையின் மூலம்

அறியலாம்.


*

Tuesday, June 25, 2024

 கவியரசர் கண்ணதாசனுக்கு முன்னதாகவும் எத்தனையோ கவிஞர்கள் சினிமாவில் பாட்டெழுதியிருக்கிறார்கள் ஆனால், கண்ணதாசனைத்தான் அவரவர் தன் மனதில் ஆசனம் போட்டு அமர வைத்து சீராட்டினார்கள். காரணம்...*


சினிமாப் பாட்டுக்குள் வாழ்க்கையைத் தேன் கலந்து கொடுத்த சித்த மருத்துவக்காரன் கண்ணதாசன்.


எங்க ஊர் ராஜா’ படத்தில், *யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க* என்று சிவாஜியின் கேரக்டருக்கு பாட்டெழுதியிருப்பார் கண்ணதாசன். ஆனால் அதை தனக்கான பாட்டு என கேட்டவர்கள் மொத்தபேரும் வரித்து கொண்டதுதான்

, கண்ணதாசன் வரிகளின் செப்படிவித்தை.


காலமகள் கண் திறப்பாள் சின்னய்யா’* என்ற பாடலைக் கேட்டு ஆறுதலும் நம்பிக்கையும் அடைந்தார்கள்.


நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே* என்ற பாட்டை கேட்டுவிட்டு,

 தங்கை இல்லாதவர்கள் கூட அழுதார்கள். தங்கை இல்லையே என்றும் அழுதார்கள்.


எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும்பகலும் நடக்கவா - இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா இரு கை கொண்டு வணங்கவா* என்று பிரிவுத்துயரத்துக்கு இந்த சிறகை இணைத்துக் கொண்டு ஆறுதலாகப் பறந்தார்கள்.


காதலின் அர்த்தமோ ஆழமோ தெரியாமல் இன்றைக்குத் தத்தளித்து தவித்து மருகிக் கொண்டிருக்கும் சமூகத்துக்கு, அன்றைக்கே காதலை சொன்னார் கவியரசர். ‘


இளமையிலே காதல் வரும் எது வரையில் கூட வரும்

முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூட வரும்’என்று காதலின் ஆயுசைச் சொன்னார். 


வாழ்க்கையின் சிக்குகளுக்குள் சிக்கி தவித்து விழுந்து கிடந்தவர்களை 


மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’பாடல் தண்ணீர் தெளித்து எழுப்பியது.


மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’* என்ற பாடலைக் கேட்டு, துக்கித்துப் பாடிய கேரக்டருக்கு தோழியானவர்கள் தோழமையானவர்கள் பலர் உண்டு. 


நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா’* காதலின் சோககீதம்; தேசியகீதம். 


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’* பாடலைக் கேட்டு, வலியை மென்று தின்றவர்கள் ஏராளம்.


காதலியை வெட்டு, குத்து, கொல்லு என்றெல்லாம் பாடப்பட்டு வரும் இந்தக் காலத்தில், *‘எங்கிருந்தாலும் வாழ்க’* என்பதை தாரக மந்திரமாகவும் காதலின் மந்திரமாகவும் ஆக்கிய கவிஞரின் வரிகள், வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது இன்னமும்.


எம்ஜிஆருக்கு *ஹலோ ஹலோ சுகமா, ஆமாம் நீங்க நலமா?* என்று போனிலேயே பாட்டுப்பாட எழுதிக்கொடுத்தார் அன்றைக்கு. 


வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்’* என்று வாழ்வின் யதார்த்தம் சொல்லி பந்தி வைத்த பாட்டுக்காரன். 


கங்கையிலே ஓடமில்லையோ?’ என்றும் பாட்டெழுதினார். 


குடிமகனே பெருங்குடிமகனே’* என்று ’வசந்தமாளிகை’ ஜமீன் போதையில் நம்மை தள்ளாட வைத்தார். 


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’* என்று கண்ணனுக்கு புல்லாங்குழல் கொடுத்தார். 


இரண்டு மனம் வேண்டும்’* என்று இறைவனிடம் கேட்டார். 


வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது?’ என்று ஜனன மரணத்தை யோசிக்க வைத்தார்.


பாரப்பா பழநியப்பா பட்டணமாம் பட்டணமாம்’ என்றும் பாடிவைத்தார். 


மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’என்றும் சொல்லி வைத்தார். 


காலங்களில் அவள் வசந்தம்’என்று காதல் காவியமாக்கினார். 


எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்’ என்று துயரம் சொல்லி அவரின் பேனா அழுதது.


அட சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டிவிடவா?’ என்று கொஞ்சினார். 


காய்காய்காய்’என்று இனிக்க இனிக்க பாடல் தந்தார்.


தேன் தேன் தேன்’ன்று திகட்டத்திகட்ட பாடல் தந்தார்.


 ‘நிலா லா லாலா என்று’ பாடினார்.


அண்ணன் இருக்கிறாரா? 

அந்த உறவுடன் பொருந்திப்போகும் கண்ணதாசனின் பாட்டு. 


தம்பி இருக்கிறாரா? ‘அம்மம்மா தம்பி என்று நம்பி’ என்று அதற்குப் பொருந்துவதற்கும் ஒரு பாட்டு.


 தங்கை உண்டா? பாட்டு உண்டு. 


அக்கா இருக்கிறாரா? அவருக்கும் உண்டு பாட்டு. 


சகோதரிகளுக்குள்ளான உறவா? அதைச் சொல்லவும் பாட்டு. 


சகோதரர்களுக்குள் இருக்கும் உறவா? அவர்களுக்கும் எழுதியிருக்கிறார் பாட்டு.


பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்’ என்றும் 


ஏன் பிறந்தாய் மகனே என்றும் பிள்ளையை வைத்துக்கொண்டு பாடியிருக்கிறார். 


சொந்தம் ஒருகைவிலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒருகால்விலங்கு நான் போட்டது’ என்றும் குமுறியிருக்கிறார்.


கல்யாணத்துக்கு, 


வளைகாப்புக்கு, 


காதலின் வெற்றிக்கு, 


காதலின் தோல்வி சொல்ல, 


நட்பின் ஆழம் சொல்ல, 


உத்தியோகம் கிடைக்க, 


வியாபாரத்தில் செழித்ததையும் நொடித்ததையும் சொல்ல,


 எத்தனை பாட்டுகள்? 


கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று கடவுளுக்கே சாபம் கொடுப்பார். 


தெய்வம் இருப்பது எங்கே?’என்று கேள்வியும் கேட்பார். 


தெய்வமே தெய்வமே என்பார். 


கண்ணா கருமை நிறக்கண்ணா’ என்பார். ‘


கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான் என்று கிருஷ்ண தரிசனத்தில் திளைப்பார்.


உன்னை அறிந்தால்’என்பார். 


சட்டிசுட்டதடா’என்பார்.


என்ன நினைத்து என்னை படைத்தாயோ என்று கேட்பார். 


சிறு இன்பம் போன்ற துன்பத்திலே இருவருமே நடந்தோம் என்பார். 


காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி என்று கடவுளை கூண்டுக்குள் ஏற்றுவார்.


ஆறு மனமே ஆறு என்று வாழ்வின் தத்துவத்தை எளிமையாக எடுத்துரைப்பார்.


பாதை வகுத்தபின் பயந்தென்ன லாபம், பயணம் நடத்திவிடு விலகிடும் பாவம் என்பார்.


 கொன்றால் பாவம் தின்றால் போச்சு போடி தங்கச்சி... தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்பார். 


ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி, முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி என்பார்.


ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையில் எத்தனையெத்தனை சம்பவங்கள், 

தோல்விகள், 

சந்தோஷங்கள், 

வெற்றிகள், 

காயங்கள். 

அத்தனைக்கும் மருந்து போட்ட காரைக்குடி மருத்துவன் கண்ணதாசன். காலக்கணிதக்காரன் கண்ணதாசன்.


எம்ஜிஆர்- சிவாஜி காலத்தில், இவர்களையும் தாண்டி எல்லோராலும் நேசிக்கப்பட்ட கவிஞன் கண்ணதாசன்.


வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ என்று எழுதிவைத்தார் கவியரசர்.


ஆனால், கடைசி வரை மனித வாழ்வில் உடன் வரும் கண்ணதாசனின் வரிகள்... சாகாவரம் பெற்ற வரிகள். காரணம்... சாகாவரம் பெற்ற கவிஞன்!


சிறுகூடல்பட்டியில் பிறக்கும்போது முத்தையா என்றும் 

பிறகு கண்ணதாசன் என்றும்... 

பிறக்கும் அந்த வீட்டுக்கும் ஊருக்கும் சொந்தம்... 

பிறகு இந்த உலகுக்கே... தமிழ் உலகுக்கே சொந்தம் என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது போலும்!


படித்தேன்

பகிர்ந்தேன்

Saturday, June 22, 2024

 இன்று ஒரு குட்டிக்கதை*


*ஸ்ரீராமருக்கும் ஹனுமனுக்கும் நடந்த போர்!*

ஸ்ரீராம நாமத்தின் பெருமை

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்க எவன் காணப்படுகிறானோ, அவனே மாருதி எனும் வாயுபுத்திரன் என்ற வாசகங்களால் ஆஞ்சநேயன் எனும் ஹனுமனுக்கு அடையாளம் காட்டப்படுகிறது. 

த்ரேதா யுகத்தில் ஹனுமனாக அவதரித்து ஸ்ரீ ராம சேவை செய்தார்.

துவாபர யுகத்தில் பாண்டவர்களில் ஒருவரான பீமனாக அவதரித்து ஸ்ரீகிருஷ்ண சேவை செய்தார்.

கலியுகத்தில் ஸ்ரீ மத்வாச்சார்யாராக அவதரித்து ஸ்ரீ வேதவ்யாச சேவை செய்தார்.

ஸ்ரீ ராமாவதாரத்தில் ஸ்ரீராம ஸேவை ஒன்றையே தன் லட்சியமாகக் கொண்டு, ஸ்ரீராம நாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக்கொண்டு இருப்பவர் சிரஞ்ஜீவியான ஹனுமன். அப்பேர்ப்பட்ட ஹனுமனுக்கும் ஸ்ரீராமருக்கும் யுத்தம் நடந்தது என்று சொன்னால், நம்புவீர்களா?

ஆம் அப்படியொரு சம்பவம் நம் ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அது, காலத்தால் அழியாத உண்மை ஒன்றை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. 

பட்டாபிஷேகத்துக்குப் பிறகு நீதி தவறாது ராமராஜ்ஜியம் நடத்தி வந்த ஸ்ரீராமர், மக்களின் நலன் கருதி, நாட்டின் வளமைக்காக, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்ரி முதலான மகரிஷிகளைக் கொண்டு யாகம் ஒன்றை நடத்தினார்,

அவர் அயோத்தியை அடுத்த அழகிய வனத்தில், பெரிய யாக குண்டங்கள் அமைத்து, முனிவர்கள் யாகத்தை நடத்திக்கொண்டு இருந்தனர்.

சக்கரவர்த்தி ஸ்ரீராமரின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய நாட்டின் மன்னன் சகுந்தன்.  அவன் ஒருநாள், வேட்டையாடிவிட்டு வரும்போது, யாகசாலைக்கு அருகில் வந்தான். தான் வேட்டையாடிவிட்டுத் திரும்பியிருந்தபடியால், யாகசாலைக்குள் நுழைவது சரியல்ல என்று கருதி, வெளியில் நின்றபடியே நமஸ்கரித்து, வசிஷ்டாதி முனிவர்களுக்கு என் வணக்கங்கள் என்று கூறிப் புறப்படத் தயாரானான். சகுந்தன் கூறிய வார்த்தைகள், நாரத முனிவரின் காதில் விழுந்தது. விறு விறுப்பான நாடகம் ஒன்றைத் தொடங்க நினைத்தார். அற்புதமான கதைக்கு, கரு ஒன்று கிடைக்க... விடுவாரா நாரதர்? 

நேராக, விஸ்வாமித்திரரிடம் சென்றார். ''பார்த்தீர்களா மகரிஷி. இந்தச் சகுந்தன் சாதாரண சிற்றரசன். இவனுக்கு எத்தனைத் திமிர்? இங்கே, யாகசாலைக்கு முன்னே நின்றுகொண்டு, வசிஷ்டாதி முனிவர்களுக்கு வணக்கம் என்று கூறிச் செல்கிறான். அப்படியென்ன வசிஷ்டர் உயர்ந்துவிட்டார்?. தாங்களும்தான் ஸ்ரீராமரின் குரு. தாங்களும்தான் இந்த யாகத்தை முன்னின்று நடத்துகிறீர்கள். தங்கள் பெயரையும் சொல்லி, ஒரு நமஸ்காரம் செய்திருக்கலாம்?. தங்களை வேண்டும் என்றே அவமானப்படுத்த, இவன் வசிஷ்டரை முதன்மைப்படுத்தி, மற்றவர்களைச் சிறுமைப்படுத்தி, அவருக்கு மட்டும் வணக்கம் செலுத்தியிருக்கிறான்" என்றார் நாரதர். 

உடனே விஸ்வாமித்திரரின் முகம் கோபத்தால் சிவந்தது. கண்களில் தீப்பொறி பறக்க அவர் சாபமிடத் தொடங்குமுன், நாரதர் தடுத்து நிறுத்தினார். 

"அந்த அற்பனுக்குச் சாபமிட்டு, தங்கள் தவ பலத்தை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்?. தங்கள் சீடர் ஸ்ரீராமர். சகுந்தனோ அந்த ஸ்ரீராமரின் கீழே இருக்கிற சிற்றரசன். இவன் செய்த பிழையை ஸ்ரீராமரிடம் கூறி, இவனுக்கு உரிய தண்டனையை அவரையே தரச் சொல்லுங்கள்'' என்றார் நாரதர்.

விஸ்வாமித்திரருக்கும் அது சரியெனப்பட்டது. சில நாழிகைகள் கழித்து யாக சாலைக்கு வந்த ஸ்ரீராமரிடம், ''உன் குருவை ஒருவன் அவமதித்தால், அவனுக்கு நீ என்ன தண்டனை தருவாய்?'' என்று கோபத்துடன் கேட்டார்.

அவரை யாரோ அவமரியாதை செய்திருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டார் ஸ்ரீராமர். 

''குருதேவா! தங்களை அவமதித்தவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களுக்குத் தக்க தண்டனையை தாங்களே கூறுங்கள். நிறைவேற்றி வைப்பது என் கடமை'' என்றார்.

''சகுந்தன் என்னை அவமதித்து விட்டான். அவன் சிரசை இன்று சூர்ய அஸ்தமனத்துக்குள் என் காலடியில் சேர்க்கவேண்டும்'' என்று விஸ்வாமித்திரர் சொல்லி முடிக்கக் கூட இல்லை...

''தங்கள் ஆணைப்படியே செய்கிறேன். இது சத்தியம்! '' என்று வாக்களித்துவிட்டார் ஸ்ரீராமர். நாரதர் தொடங்கிய நாடகத்தின் முதல் காட்சி முடிந்தது.

ஸ்ரீராமர் செய்தியனுப்பினால் போதும், சகுந்தனே தன் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து அனுப்பிவிடுவான். இருந்தாலும், அது ஸ்ரீராமர் கடைப்பிடிக்கும் க்ஷத்திரிய தர்மத்துக்கு அழகாகுமா? எனவே, ஸ்ரீராமர் போர்க்கோலம் பூண்டு, சகுந்தனின் நாட்டை நோக்கிப் புறப்படத் தயாரானார்.

நாடகத்தின் இரண்டாவது
காட்சியைத் தொடங்கினார் நாரதர். நேரே சகுந்தனிடம் சென்றார். 

''என்ன காரியம் செய்து விட்டாயப்பா? வசிஷ்டரின் பெயரைச் சொன்னவன், விஸ்வாமித்திரர் பெயரையும் 
சொல்லியிருக்கக் கூடாதா?. இப்போது பேராபத்தைக் தேடிக் கொண்டாயே! படையெடுத்து வருபவர் ஸ்ரீராமர் ஆயிற்றே! என்ன செய்யப் போகிறாய்?'' என்று ஆதங்கமாகக் கேட்டுவிட்டு, மற்ற விவரங்களையும் சொன்னார்.

''நான் என்ன செய்ய முடியும் சுவாமி? இலங்கேஸ்வரன் ராவணனாலேயே எதிர்க்க முடியாத ஸ்ரீராமரை நான் எப்படி எதிர்க்க முடியும்? முடியாது. என் தலைதானே ஸ்ரீராமருக்கு வேண்டும்? அதைத் தாங்களே வெட்டியெடுத்துச் சென்று, அவரிடம் தந்துவிடுங்கள்'' என்று உருக்கமாகக் கூறி, சகுந்தன் தன் வாளை உருவ, நாரதர் அவனைத் தடுத்துச் சிரித்தார். 

''சகுந்தா! உண்மையில் நீ விஸ்வாமித்திரரை அவமதிக்கவில்லையே... அப்படி இருக்கும்போது, ஏன் கலங்குகிறாய்? '' என்ற நாரதர், 

''சகுந்தா.. உன் நாட்டை அடுத்த வனத்தில், ஆஞ்சநேயனின் தாய் அஞ்சனாதேவி ஆட்சி புரியும் கானகம் இருக்கிறது. அங்கே சென்று தவம் செய். அவள் கருணை மிக்கவள். அவளால் உனக்கு உயிர்ப்பிச்சை தரமுடியும். பிறகு, ராம பாணம்கூட உன்னை ஒன்றும் செய்யமுடியாது'' என்று உறுதி கூறினார் நாரதர். 

சகுந்தன் மனதில் நம்பிக்கை பிறந்தது. அஞ்சனாதேவி ஆட்சி புரியும் கானகம் சென்றான். அங்கே அக்னியை வளர்த்தான். அஞ்சனாதேவி சரணம் என்று பக்தியுடன் அக்னியைச் சுற்றிப் பலமுறை வலம் வந்து பிராணத் தியாகம் செய்யத் தயாரானான். தாயல்லவா அவள்! தன்னைச் சரணடைந்த குழந்தையை சாக விடுவாளா?

அவன் முன் தோன்றி, "குழந்தாய், கவலைப்படாதே! என்னைச் சரணடைந்த உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது. தீர்க்காயுஷ்மான் பவது'' என்று ஆசி கூறி, அவன் நீண்ட ஆயுள் வாழ வரம் தந்தாள். சகுந்தன் அவளது திருவடியில் விழுந்து வணங்கினான். "நான் மரண கண்டத்தில் சிக்கியுள்ளேன் தாயே! ஸ்ரீராமர், என் சிரஸைத் தன் குருவின் காலடியில் சூர்ய அஸ்தமனத்துக்குள் சேர்க்கும் சபதம் பூண்டு, என் மீது போர் தொடுத்து வருகிறார். இப்போது நான் உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் என அருளுங்கள்" என்றான்.

அதைக் கேட்டுப் பதறிப் போனாள் அஞ்சனாதேவி. ஸ்ரீராமரின் பாணத்திலிருந்து சகுந்தனைக் காப்பாற்றுவது என்பது இயலாத காரியமாயிற்றே எனக் கலங்கினாள். இருந்தாலும், தான் உயிர்ப்பிச்சை அளித்தவனைக் காக்க வேண்டியது தன் கடமை என்பதில் உறுதியாக இருந்தாள். தன் வாக்கைக் காக்கும் பொறுப்பை, தன் மைந்தன் ஹனுமனிடம் ஒப்படைக்க முடிவு செய்தாள்.

தன் மகனை, தன் முன்னே தோன்றும்படி சங்கல்பித்தாள். அந்த நிமிடமே, எதிரே வந்து நின்று வணங்கினான் ஹனுமன். ஸ்ரீராமரின் பித்ரு பக்திக்கு ஹனுமனின் மாத்ரு பக்தி எந்த விதத்திலும் சற்றும் குறைந்ததல்ல. 

''மகனே! இவன் சகுந்தராஜன். பிராணத்தியாகம் செய்யத் துணிந்தபோது,  இவனைக் காப்பாற்றி, உயிர்ப்பிச்சை தருவதாக வாக்குறுதி தந்துவிட்டேன். என் வாக்கைக் காப்பாற்றும் பொறுப்பை இப்போது உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவனை எப்படியேனும் காப்பாற்று!'' என்று கட்டளையிட்டாள். 

அப்படியே ஆகட்டும் தாயே! என உறுதியளித்தான் ஹனுமன். 

பின்பு, தனது உயிரைப் பறிப்பதற்கு ஸ்ரீராமர்தான் தேடுகிறார் என்பதைச் சகுந்தன் சொல்ல.. ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டார் வாயு புத்ர ஹனுமன். 

எதிர்ப்பது நம் பிரபுவையா ஸ்ரீராமரையா..????? ஆனாலும், தன் தாயிடம் அடைக்கலம் கேட்டு வந்தவனைக் காப்பது தன் கடமை என்று, இது பிரபு ஜெய் ஸ்ரீராமரின் திருவிளையாடலே என உறுதியுடன் நின்றான். எந்த ஆபத்தையும் எதிர்க்கும் வல்லமையின் ரகசியம் ஒன்றை அவன் அறிந்து வைத்திருந்தான். தன் வாலை நீளமாக வளர்த்து, அதனை ஒரு கோட்டைபோல அமைத்தான். அதற்குள் சகுந்தனைப் பாதுகாப்பாக அமர்த்திவிட்டு, சிறு குரங்கின் உருவெடுத்து, வால் கோட்டையின் மேல் அமர்ந்து கொண்டு, தாய்க்குச் செய்யும் கடமைக்காகத் தாயினும் மேலான தலைவனையே எதிர்க்கத் தயாரானான்!

இதனிடையில் ராம, லட்சுமணர்களின் சைன்யம் சகுந்தராஜனின் தலைநகரில் புகுந்தது. உயிருக்குப் பயந்து, சகுந்தன் அஞ்சனா வனத்தில் மறைந்து இருப்பதை அறிந்து, ஸ்ரீராமர் அங்கே சென்று, போரைத் தொடங்கினார். சகுந்தராஜன் மறைந்திருக்கும் மலை போன்ற வால் கோட்டையை நோக்கி ஸ்ரீராமரின் அஸ்திரங்கள் சரமாரியாக வானில் பறந்தன. ஆனால், அவர் எய்த அஸ்திரங்கள் யாவும் அடுத்த சில விநாடிகளில் அவரின் திருவடிகளிலேயே திரும்பி வந்து விழுந்தன. அதிசயித்துப் போனார் ஸ்ரீராமர். யுத்தம் தொடர்ந்தது. ஸ்ரீராமர் கற்ற அஸ்திர வித்தைகள் அனைத்துமே தோற்று நின்றன. இதற்கான காரணம் தெரியாமல் ஸ்ரீராமர் திகைத்து நிற்க, நாரத முனிவர் தான் போட்ட முடிச்சை அவிழ்க்க, அங்கே வந்து நின்றார்.

''ராமா! உன் அஸ்திரங்களின் சிம்ம நாதமும், உனது யுத்த பேரிகையின் சப்தமும் ஒரு கணம் நிற்கட்டும். அப்போது இதன் காரணத்தை நீ அறியலாம்'' என்றார் சூசகமாக. 

ஒரு கணம் யுத்த பூமியில் அமைதி தோன்றியது. அப்போது எங்கிருந்தோ, காற்றில் மிதந்து வந்த ராம்.. ராம் என்னும் ராம நாம சப்தம் கேட்டு, அனைவரும் மெய்சிலிர்த்தனர்.

அது ஹனுமனின் குரல்தான். அவன் ஒருவனால்தான் ராம நாமத்தை அத்தனை பக்தியோடும், சக்தியோடும் ஜபிக்க முடியும் என்பது ஸ்ரீராமருக்குத் தெரியும். நாடகத்தின் இறுதிக் காட்சிக்கு வந்தார் நாரதர்.

''ராமா! உன் திருநாமத்தின் சக்திக்கு முன்னால், உன்னாலேயே எதுவும் செய்ய முடியாது. உன் நாமம் அத்தனை புனிதமானது. சக்தி வாய்ந்தது. உலகின் எந்த சக்தியாலும் உன் நாமத்தை எதிர்த்து நிற்க முடியாது. காலத்தால் அழியாத பெருமை வாய்ந்தது உன் நாமம். அதிலும், அதனை ஆஞ்சநேயன் ஜபிக்கிறான் என்றால், அதை வெல்ல எவராலும் முடியாது?'' என்று கூறி, நடந்ததையெல்லாம் விளக்கினார்.

''ஹனுமன் ராம நாமம் ஜபிப்பதை நிறுத்தினால்தான், உன் அஸ்திரங்கள் இந்த எல்லையைக் கடக்கும். ஹனுமனை அழித்தால்தான் அந்த நாமம் ஒலிப்பது ஓயும். அவன் இதயத்திலோ, ஸ்ரீராமனையோ பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறான். அவனை அழிப்பது சுலபமல்ல. ஆனால், ஹனுமனை வென்றால்தான் சகுந்தனை வெல்ல முடியும். அப்படியெனில், ஸ்ரீராமன் தன்னையே அழித்துக் கொண்டால்தான் இது சாத்தியமாகும்'' என்று சிக்கலை மேலும் சிக்கலாக்கி, நாரதர் விளக்கியபோது, 

''வேண்டாம் ராமா, வேண்டாம்! இந்த விபரீதத்துக்கு என் அகந்தையே காரணம். போரை நிறுத்திவிடு. சகுந்தன் நிரபராதி'' என்று கூறியபடியே, ஓடி வந்தார் விஸ்வாமித்திரர்.

சரி... ஆனால், சகுந்தனின் சிரசை சூரிய அஸ்மனத்துக்குள் விஸ்வாமித்திரரின் பாதத்தில் சேர்ப்பதாக வாக்களித்தாரே ஸ்ரீராமர்! அது என்ன ஆவது?. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் வாக்கு பொய்ப்பதா? 

அதற்கும் ஒரு வழி சொன்னார் நாரதர்.

சகுந்தராஜனை நாரதர் அழைக்க, அவன் வால் கோட்டையிலிருந்து வெளியே வந்து, விஸ்வாமித்திரர் பாதங்களில் தன் சிரம் படும்படி நமஸ்கரித்தான். சகுந்தன் சிரசைத் தன் காலடியில் சேர்க்க வேண்டும் என்று தானே அவர் கேட்டிருந்தார். ஆக, ஸ்ரீராமரின் வாக்கும் பொய்க்கவில்லை. சகுந்தனின் சிரம் விஸ்வாமித்திரரின் பாதங்களில் சேர்ந்தது. அஞ்சனா தேவியின் வாக்கும் பொய்க்கவில்லை. ஹனுமனும் எடுத்த கடமையில் இருந்து தவறவில்லை.
 
ஸ்ரீராம நாமத்தின் பெருமையை உலகத்தார் அனைவரும் தெரிந்துகொள்ள நாரதர் நடத்திய அருமையான நாடகம் இது.

ராம ராம ராம ராம ராம ராம ராம

Thursday, January 20, 2022

Enninaivugalin e pathivu

 தினம் ஒரு தகவல்----ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? 

இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு. 

உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே? என்றான் .

அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம் .மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே? ஒரு குறையும் இல்லை என்றார் குரு அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழம். மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான்.

குரு கேட்டார் கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா? வலிக்காது குருவே என்றான் .மேலும் சிறிது நீரை ஊற்றினால்.?.. குரு கேட்டார். அதுவும் வலிக்காது குருவே என்றான். 

குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்? 

என் தலை பிளந்துவிடும் குருவே என்றான். உன் கேள்விக்கான விடை கிடைத்து விட்டது. என்றார் குரு.

Thursday, December 30, 2021

Enninaivugalin e pathivu

 #படிங்க_ரொம்ப_பிடிக்கும் 


அந்த வீட்டுப் பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார். எரிச்சலும் கொள்வார். ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்.


ஒருநாள் அவரது கணவர், "நான் நண்பர்களோடு சேர்ந்து பியர் அருந்த போகிறேன்" என்று அந்த பெண்ணிடம் கூறினார். அவரும் அமைதியாக சம்மதித்தார்.


மகன் தனது தாயாரிடம் தயங்கியவாறு, "அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான். அதற்கு அந்த பெண்ணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும். முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக.


மகள் ஓடி வந்து, "அம்மா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு. அதற்கு தாய், "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்.


குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர்.


ஒருநாள் அந்த பெண்மணியே எல்லோரையும் அழைத்து அமர வைத்து பின்வருமாறு கூறினார்:


"சில உண்மைகள் புரிய எனக்கு நீண்ட காலம் எடுத்தது. அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு. என்னுடைய கோபம், என்னுடைய பதற்றம், என்னுடைய பயம், என்னுடைய மன அழுத்தம், என்னுடைய தைரியம் எதுவும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை. அவை என் ஆரோக்கியத்தை கெடுத்து என் பிரச்சினைகளை தான் அதிகரிக்கும். 


என் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே உங்களுக்கு என்னால் கொடுக்க முடியும். உங்களுக்கு தேவைப்பட்டால் என் அறிவுரைகளை நான் தருவேன். உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்வேன். ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது.  


ஏனெனில் என்னை சார்ந்து நீங்கள் இந்த பிறவியை எடுக்கவில்லை. இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை. உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு கூறல் வேண்டும். உங்கள் பிரச்சினைகளை களைந்து உங்கள் சந்தோசத்தை நீங்களே தேடுமளவுக்கு நீங்களும் எல்லா அறிவையும் பெற்றுள்ளீர்கள். ஆகவே தான் நான் அமைதியாகி விட்டேன்."


குடும்பமே வாயடைத்துப்

போனது...


அவர்களின்

செயல்பாடுகளுக்கு

அவர்களே பொறுப்பு

என்று அனைவரும்

உணர்ந்து விட்டால்

வாழ்க்கை

அமைதிப் பூங்காவாக

மாறும்

Wednesday, December 22, 2021

Enninaivugalin e pathivu

 ஆமை சொல்லும் இரகசியம் !

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள்

உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில்

போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த

தொழில் நுட்பம்!

தன் நுண்ணறிவால்

நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள்

நிறைய.

கடல் ஆமைகள் கடலில் இருக்கும்

நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ

வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்

சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல்

போக்குவரத்தை நீரின்

ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.

இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல்

தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்

கடல்படையும் போகமுடியாத பல

இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!

மத்திய

தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல

வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.

பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்

பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை

அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்

மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில்

ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.

உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,

கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்

மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.

கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.

சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்

இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்

பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்

அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.

போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்

உண்மை!

கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன்

தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ்

கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட

வழித்தடமும் ஒன்றுதான்!

ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க

இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும்

ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம்

தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.

விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம்

உண்டு. தான் பிறந்த

இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.

தமிழ்கத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. இதில்

பல ரகசியங்கள் இருக்கும் போல! - Krish Ram

Enninaivugalin e pathivu

 உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....!!


எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோர செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்களே....!


அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது. இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.


பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனை பேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கே அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.


தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.


ஹிட்லர் மன்னிப்பு கோரல்

---------------------------------------

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.


‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.


முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடைய ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார். puradsifmcom 


இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை” என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.


யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.


இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிட்டு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.

Enninaivugalin e pathivu

 நேற்று ராத்திரி மணி எப்படியும் இரண்டு இருக்கும்...திடீர்னு ஒரு ம்யூசிக் கேட்டது..சட்டுனு தூக்கம் கலைஞ்சி போச்சி....நல்லா செம குளிர் வேற இங்க..இழுத்து போர்வை தலைலேந்து கால் வரைக்கும் போர்த்தி  படுத்துருந்தேன் திரும்ப அதே ம்யூஸிக்..அட இது நமக்கு பழக்கப்பட்ட  சவுண்ட்  ஆச்சேனு  உத்து கேட்கவும் கண்டுபிடிச்சிட்டேன் இது Candy Crush Gameசவுண்ட் ஆச்சே..அய்யோ இந்த பாதி ராத்திரில யாரு விளையாடுறா?இவரா நு யோசிக்கும்போதே ஒரு பெரிய கொறட்டை சவுண்ட் இவர்க்கிட்டருந்து அது நான் இல்லைனு எனக்கு கன்பார்ம் பண்ணினமாதிரி.....கூடவே மறுபடியும் ஏதோ கேண்டி நொறுங்கி இருக்கும் போல ஸ்வீட் அப்படினு ஒரு சவுண்ட்...இப்ப கொழப்பமே இல்ல கன்பார்ம்மா அது ஏதோ ஒன்னு தான்...பேய் பிசாசுங்களுக்கெல்லாம் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மேல எப்பவும் ஒரு ஈர்ப்பு உண்டு..ஈஸியா அவைகளை அதால் ஊடுருவ முடியும்...பேய் அங்க  இருக்குனா அந்த இடங்களில் லைட்லாம் சரியாக எரியாது...பிளிங் ஆயிட்டே இருக்கும்.....எப்பவோ ஹண்டிங் ல பார்த்த ஒரு ஸீன் நியாபகம் வேற வந்து தொலைந்தது நேரம் பார்த்து...கண்ண இருக்கி மூடிக்கிட்டேன்...


கொஞ்ச நேரம் அந்த சவுண்ட் கேட்கலை...சரி தைரியமா இவர எழுப்பலாம்னு நினைக்கும் போதே திரும்ப நிறைய்ய கேண்டிய க்ரஸ் பண்ணின சவுண்ட்..இப்ப டேஸ்ட்டினு சத்தம்...செத்தேன்..கடவுளே எப்டியாவது  அதுக்கு இருக்கிற அஞ்சி லைஃப்பும் தீர்ந்து போகனும்....அது சீக்கிரம் தோத்துப்போய் இந்த இடத்த காலி பண்ணினா போதும்னு கந்தசஷ்டி கவசம் சொல்லுவோம்னு மனசுக்குள்ளயே சொன்னா பதினைஞ்சி லைனுக்கு மேல சரியாவே வர மாட்டேங்குது அதனால என்ன திரும்ப மொதல்லேந்தே சொல்லுவோம்னு ..மறுபடியும் டிகுகுண டிகுகுண டிகுகுண லயே நிக்குது...இந்த கன்ப்யூஸ்ல அந்த சத்ததை நோட் பண்ண விட்டுட்டேன்....


என்ன பண்ணிவச்சிருக்குனு தெரில ஒருவேளை அந்த 171வது லெவல்லயே ரொம்ப நாளா ஜெயிக்காம இருக்கோம்னு நமக்காக வெளையாடி கொடுக்குதோனு  ஒரு சின்ன கரிசனம் அது மேல வந்தாலும்....நோ பேய் சகவாசம் கூடாதுனு..இப்ப வேற ஸ்லோகம் ஏதாவது சொல்லலாம்னு நினைக்கும்போதே இவர் திரும்பி படுக்கிற சவுண்ட்...இதான் சமயம் டக்குனு எழுந்துப்போம்னு நினைக்கும்போதே கேண்டி சவுண்ட்....இது கேம்ம கேன்சல் பண்ணின சவுண்ட்.....அப்பாடா வெளையாடி முடிச்சி தொலைஞ்சது..இனி போய்டும்...இப்ப நாம் எழுந்துக்க வேணாம் நம்மள அது பாதி ராத்திரில பார்த்து டென்ஷன் ஆயிடும்... இப்படியே  கொஞ்சநேரம் மூச்சு விடாம படுத்துப்போம்னு அப்டியே நானும் கொர்ர்ர்ர்ர்ர்ர்.....


காலைல....ஏண்டி உனக்கு  எத்தனை தடவை சொல்லிருக்கேன் நைட்டு தூங்கும்போது கேம் விளையாடாதனு.நீ விளையாடீட்டு அப்டியே தூ்ங்கிட்ட...நைட்டு உன் மொபைல் மேல நான் படுத்திருக்கேன் போல...ஒரே  கேம் சத்தம்...எடுத்து ஆஃப் பண்ணிட்டு படுத்தேன்...இனிமேல் மொபைல்ல படுக்கும்போது கேம் விளையாடின அவ்ளவுதான்னு சொல்லிட்டு போறாரு....


அப்டீனா அந்த டிகுகுண டிகுகுண சஷ்டி கவசத்தை பாதி ராத்திரில உங்களுக்குதான் டெடிகேட் பண்ணினேனா நானு அவர பார்த்து கேட்கவும் ..நீ யாருனு நினைச்சனு கேட்கவும்...நான் பேய்னு சொல்லவும்..இந்த வீட்டுல ஒரு பேய்க்குதான் அலவ்டுனு சொல்லிட்டு  வாஷ் ரூம்க்கு ஓடிட்டார்....


சே இவர் கொறட்டை விடும்போதெல்லாம் இவர் தொப்பைக்கு இடுக்குல என் மொபைல் மாட்டி அந்த வைப்ரேஷன் ல கேம் அப்ப அப்ப ஆன் ஆயிருக்கு...இது தெரியாம நான் பேய் மேல வேற வீண் பழி சுமத்திட்டேன்...

Monday, December 20, 2021

Enninaivugalin e pathivu

 வாழ்க்கை என்பது ஒரு வழிப் பாதை...திரும்பி போகமுடியாது..திரும்பி பார்க்கத்தான் முடியும்..எனவே மனம் போகும் போக்கில் என் நினைவுகள்........விரும்புவதே விருப்பமானவர்களுக்காக செய்வதை விட  எனக்கு மிகவும் பிடித்த பல விஷயங்களை விரும்பியவர்களுக்காக செய்யாமல் கழித்த நாள்களே அதிகம்..அந்த மன ஆரோக்கியம் அப்ப மிகுதியாக என்னிடம் இருந்தது...காலத்தின் கட்டாயத்தால் இப்ப குறைந்து விட்டதோ என்ற மனக் கலக்கம் அடிக்கடி எனக்கு தோன்று கிறது.

Thursday, December 16, 2021

Enninaivugalin e pathivu

 மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.


என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !


நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!


என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!


தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்.


அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!


தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக !


நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.!


எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!


நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய "நேரம் மட்டுமே:"


உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!

Tuesday, December 14, 2021

Enninaivugalin e pathivu

 முத்து இல்லம் ' என்று அழகாக பொன் எழுத்துக்களால் பொறித்த வீட்டிற்கு நுழைந்தும் நுழையாததுமாய்...


" இப்போது திருப்தியா அலமேலு ! நீ நினைச்சது போல செஞ்சாச்சு " என்றான் ராஜா என்ற முத்துராஜன்.


"என்னங்க அப்படி சொல்லிட்டீங்க. எனக்கு மட்டுமா சந்தோசம் ! ஏன்? உங்களுக்குமில்லையா ?இல்லே  நம்ம மாலா, லீலா குழந்தைங்களுக்குமில்லையா ? என்னமோ எனக்காக மட்டும் இந்த காரியத்தை செய்தாற்போல சலித்துக்கொள்றீங்களே" சற்று அழுத்தமான பேசினாள் அலமேலு.


அன்றைய பொழுது என்றைக்குமில்லாத அளவுக்கு மிக மிகச் சுதந்திரமாய் மகிழ்ச்சி கடலில் மூழ்கியது. நேற்று வரை இருந்த உணவு கட்டுப்பாடு தளர்ந்தது. நேற்று வரை  அதாவது இந்த நாளையில் இந்த உணவு தான் இந்த வேளைக்குச் சாப்பிடவேண்டுமென்ற கட்டளை நீங்கியது. அளவு சாப்பாடு என்று ஒன்று அன்று முதல் அளவற்ற சாப்பாடாக மாறியது. டி.வி ஓடும் நேரம் ஒரு மணி நேரமாய் இருந்த சட்டம் அன்றிலிருந்து  எந்நேரமும்  ஓடத் துவங்கியது. கண்ணில் காட்டாத அல்லது காணாமல் போயிருந்த நொறுக்கு தீனிகள் அன்று கணக்கில்லாமல் தீர்ந்தன. மாலைநேர குட்டி தூக்கம் நீளமாக மாறின. சாயும்கால குழந்தைகளின் படிப்பு சீரியல் பார்ப்பதிலும், பாட்டு கேட்பதில் கழிந்தன. இதுவரை முகவரி தெரியாத வாயில் நுழையாத ஹோட்டல் சாப்பாடு வகைகள் வீடு தேடி வந்தன. இந்த அவுத்துவிட்ட மகிழ்ச்சியில் அனைவரும் மறுநாள் பொழுது விடிவது கூட அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

காலையில் அந்த வீட்டு வாசலில் வழக்கம்போல பேப்பர் போடும் பையன் "சார்! பேப்பர். .. சார்.. பேப்பர் " என்றைக்குமே இப்படி கூப்பிடாதவன் அன்று மூன்று அழைத்தும் யாரும் வராத காரணத்தினால் அந்த தினசரி நாளிதழை வீட்டு வாசலில் தூக்கியெரிந்தான்.


அவனுக்கு அந்த வீட்டிலிருந்து எவ்வித பதிலும் வாராதது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நேற்று வரை இந்த வீட்டில் அந்த பேப்பர்கார பையன் வருவதற்கு முன்பே  அந்த வீட்டில் இருக்கும் பெரியவர் அதாவது முத்துராஜனின் அப்பா முத்துமணி காத்திருந்து அந்த தினசரியை கையில் தான் வாங்குவார். அது அவர் தினசரிக்கும் கொடுக்கும் மரியாதையா? என்று சரியாக தெரியவில்லை. இன்று அவர் வாசலில் இல்லாதது அவன் மனதை சற்று வருடியது. 


முத்து ராஜனின் நண்பர் நடேசன் வழக்கம் போல 'நடை மற்றும் தியான பயிற்சி' செய்வதற்கு தனது நண்பனுக்காக வீட்டிற்கு முன்பு காத்திருந்தான். அவர்கள் தினமும் இவைகளைச் செய்ய தவறுவதில்லை.              


" அவரு தூங்குறாரு, இனிமே தினமும் பயிற்சிக்கு வரமாட்டார். முடிஞ்சா வாரம் ஒரு நாள் அதுவும் ஞாயிறு கிழமை மட்டும் வருவார் " என்றவாறு அவருடைய பதிலுக்கு காத்திருக்காமல் வாசலில் இருந்த தினசரியையும், பாலையும் எடுத்துக்கொண்டு அவசரம் அவசரமாக சமையலறைக்கு ஓடினாள். 

வீட்டினுள் .. சமயலறையில் சமையல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ஒருபுறம் குழந்தைகளுக்கு வேண்டியதை செய்துகொண்டும் மறுபுறம் தான் அலுவலகம் செல்வதற்கும் தயாராகிக் கொண்டிருந்தான் முத்து ராஜன். இந்த பரபரப்புக்கு காரணம் அனைவரும் அன்று நேரம் தாழ்ந்து எழுந்ததால் தான். கண்மூடித் திறப்பதற்குள் காலம் பறந்தது. எல்லா வேலைகளும் ஏனோதானோவென்று அரைகுறையாக நடந்தது.


இருசக்கரத்தில் அலுவலகம் சென்ற முத்து ராஜன் அன்று சீக்கிரமாகவே காரில் அவருடைய சக தொழிலாளி இரண்டு பேருடன் வீட்டிற்கு வந்து இறங்கினான். அவரை இருவரும் இருபக்கத்தில் கை தாங்களாக மெதுவாக வீட்டிற்குள் அழைத்து வந்து காற்றாடியை வேகமாக பறக்கவிட்டு கட்டிலில் படுக்க வைத்தனர். இந்த காட்சியை கண்ட அலமேலு "என்னங்க...." என்று துடிதுடித்துப் போனாள். கவனம் சிதறியதால் கை கால் உதறியது. அந்த நிகழ்வை கிரகித்துக்கொள்ள ரொம்பவும் கஷ்டப்பட்டாள்.

அவருடைய 'பாஸ் ' இன்னைக்கு லீவு. எல்லா வேலைகளும் இவன் மட்டுமே பார்த்தான். அதனாலே கொஞ்சம் பிரசர் அதிகமாயிருக்கும் என்று நினைக்கிறோம். அதை உறுதி செய்ய வரும்போது பக்கத்தில் இருந்த டாக்டரிடம் காட்டினோம். அவரும் பிரசர் இருப்பதை உறுதி செய்தார். ஆனால் இது ஆரம்பம் தான் என்றும் இப்போதிலிருந்து தகுந்த ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டால் சீக்கிரமே சரியாகிவிடும் என்றும் சொன்னார்." என்றனர் அவர்கள்.


அவர்கள் பேச பேச அதை கேட்க கேட்க அவளின் உடல் தெம்பு குறைந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் அவளுடைய உடலும் ஏறக்குறைய சோர்வாய்த்  தான் இருந்தது.

குடும்ப டாக்டரிடம் போனார்கள்..

அவர் அட்வைஸ் பண்ண தொடங்கி விட்டார்...

உங்கப்பா முதியோர் இல்லத்தில் நல்லா இருக்கின்றாரா?"

நல்லா நினைச்சு பாரு. அவரு உங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அதிகாலையிலே எழுந்து அவராலே முடிஞ்ச வீட்டு வேலைகள் செய்தது உங்களுக்கு உதவியா இருந்தார்.. அதனாலே எல்லா வேலையும் நிதானமா செய்தீங்க. அதே சமயத்தில் நீங்கள் எல்லோரும் காலையில் எழுந்து அதாவது உங்க மனைவி வீட்டு வேலைகள் பரபரப்பில்லாம செய்ததாலே உடம்பு பெருக்காம ஆரோக்கியமா இருந்துச்சு. இப்போ பெருத்திட்டா. நீயும் நடை, தியானம் செய்யாம விட்டதாலே உனக்கு இரத்த கொதிப்பு, மன அழுத்தம், அது மட்டுமில்லே எந்நேரமும் குழந்தைங்க டி.வி பார்த்ததினாலே கண்ணாடி போடவேண்டிய நிலைமை. அத்தனையும் தாண்டி பழமையான கட்டுப்பாடானான உணவு பழக்கம் உங்களின் உடல் நலத்தை நல்லபடியாக இருக்க உதவியது . அவர் உங்களுக்கு நல்ல பழக்கவழக்கத்தை உண்டுபண்ணினார். அது உங்களுடைய சுதந்திரத்தை பறிப்பதாக நினைசீங்க. ஒழுக்கம் உங்களுக்கு பாரமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. கடைசியாக உங்களுக்கு சொல்றேன். மருந்து ,மாத்திரை இல்லாம , உடம்பு கஷ்டம் இல்லாம இருக்கனும்ன்னு விரும்பினா இப்போவே உங்கப்பாவை முதியோர் இல்லத்திலிருந்து முத்து இல்லத்திற்கு அழைத்து வந்திருங்க. ஏன்னா, அவருடைய கண்டிப்பு உங்க வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. குழந்தைங்களின் எதிர்காலத்திற்கும் நல்லது. அது தான் நீங்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதையும்,  நீங்க செய்ய வேண்டிய கடமையும் ஆகும். இல்லே சாப்பாட்டுக்கு பதிலா நான் கொடுக்கிற மருந்து, மாத்திரை சாப்பிடுறதா இருந்தா இந்த மருந்து சிட்டையில் இருப்பதை வாங்கிக்கொண்டு சாபிடுங்க. முடிவு உங்கள் கையில் !" என்றார் ஆணித்தரமாக.


 

"அமாங்க, உடனே போவோம். மாமனாரை அன்புடன் அழைத்து வருவோம். கட்டுப்பாட்டுடன் உள்ள சுதந்திரம் தான் நீண்ட ஆரோக்கியம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்." என்று அவசரப் படுத்தினார்.


"ஐய்யா .. தாத்தா இனிமேல் நம்ம கூட இருக்கப் போகிறார் " என்கிற சந்தோசத்துடன் இருந்தனர்.

Enninaivugalin e pathivu

 வயதானதற்குப் பிறகு எதற்கு ப்ரைவசி???  


வயதான பிறகு கணவன் மனைவிக்கு ப்ரைவசி தேவைப்படாதா?


உண்மையில் வயதான பிறகுதான் பெரும்பாலான ஆண்கள் மனைவியைப் புரிந்துகொள்ளத் துவங்குகிறார்கள். மனைவியின் சின்ன சின்ன விருப்பு வெறுப்புகள் அவர்கள் கண்களில் படுகின்றன.


 எது செய்தாலும் மனைவியின் சௌகர்யத்தையும் கணக்கில் எடுக்கவேண்டும் என்று தோன்றுவதே வயதான பிறகுதான். அதற்கு முன் வரை எப்படியிருந்தாலும் சமாளித்துக்கொள்வாள் அவளுக்கெதற்கு ப்ரெஃபரன்ஸ் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் (சிலருக்கு) ஓடும்.


மனைவியை ஆண்கள் காதலிக்கத் துவங்குவதே ஐம்பது வயதிற்கு மேல்தான். மனைவியின் உடல் வனப்பு மறைந்து அன்பும் அக்கறையும் கண்ணில் படும் வயது அது.


கணவருக்கு வெல்லச்சீடை பிடிக்குமென்று கூட ஒன்றை இலையில் போடும்போதோ, எடுத்து வைத்துக் கொடுத்தாலோ, கிழங்களுக்கு இந்த வயசிலும் ரொமான்ஸ் பாரேன் என்று காதுபடப்‌ பேசாத இளையோர் அமையவேண்டும். இல்லையெனில் சுண்டிப் போவார்கள். 


தான் ஏதாவது கல்யாணத்தில் போய் சாப்பிட்டால், வீட்டிற்கு எதற்கோ அழைப்பதுபோல்  கால் செய்து உருப்படாமல் ஏதாவது பேசிவிட்டு,  சாப்பிட்டியா‌ என்று முடிக்கும் பெரியவர்களை எனக்குத் தெரியும்.


 எங்கேயாவது மனைவிக்குப் பிடித்த தின்பண்டங்களைப் பார்த்தால் வாங்கிக்கொண்டு வந்து அதை பகிரங்கமாகக் கொடுக்கமுடியாமல் திணறும் ஆண்கள் பலர்.

நேரடியாகக் கொடுக்க ஈகோ இடம் தராது. 


மற்றொரு விஷயம், சிறு வயதில் முகத்திற்கு நேராகப் பல விஷயங்கள் பேசியபோதும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட ‌அதே பெண்ணில்லை அவள். பெண்களுக்கு ஆண்களை விட மனோ பலமும், குடும்ப விஷயத்தில் அனுபவமும் அதிகம். எனவே, இப்போது கன்னா பின்னாவென்று பேசினால் திருப்பிக் கேட்டுவிடுவாளோ என்று ஒரு தயக்கம். 


அப்பா அம்மா ரூம்தானே என்று பெற்ற மகனோ ‌மகளோ கதவைத் தட்டாமல் அவர்களது தனியறையில் நுழைவது அவர்களுக்கு சங்கடம் தரும்.


தனியறை இல்லாவிட்டாலும் கூட அவர்கள்  இருவரின் உரையாடலை கவனிப்பதையும், அதில் குறுக்கே நுழைந்து பதில் சொல்வதையும் பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லை.


60 வயது வரை மனைவியை வீட்டில் விட்டுவிட்டு அலுலக வேலை என்று ஊர் ஊராகச் சுற்றிவிட்டு, வயதானபின் ஒருநாள் கூட மனைவியைப் பிரிய முடியாமல் தவிக்கும் பல பெரியவர்கள் உண்டு.


காமம், மற்றும் உடல் சார்ந்த விஷயங்களுக்காகத்தான் ப்ரைவசி என்றல்ல. அன்பையும் காதலையும் பரிமாறிக்கொள்ள  பெரியவர்களுக்கு ப்ரைவசி தேவைப்படுகிறது.


அதை மதிக்கும் இளைய தலைமுறை அமைந்தால் அது வரமாகும்.



Monday, December 13, 2021

Enninaivugalin e pathivu

 கவியரசு கண்ணதாசன் என்பவன் நுணுக்கமான வேலைப்பாடு தெரிந்தவன்.


நிர்வாணமாக இருந்த தமிழுக்கு விதவிதமான கவிதை ஆடையை அணிந்து அழகு பார்த்தவன்.


சிந்தனை என்று உ(ஒ)ளியால் தமிழை செதுக்கி சிற்பம் ஆக்கியவன்.


சங்கத்தமிழில் ரசித்து ரசித்துப் படிப்பவன் ருசித்து ருசித்து எழுதியவன்.


யாரும் அறியாத பெண்ணின் முழுமையான  மன ஆழத்தில் அடிவரை தொட்டவன்.


 அந்த அனுபவத்தை வரிகளில் அழகாக உரைத்தவன.


 இவ்வுலகத்தில் கவிஞர்கள் பலரும் உண்டு.


ஆனால் கவிஞரைப் போல் ஒருவரும்  இல்லை.

Enninaivugalin e pathivu

 கவிமொழி


கவியரசர்

கண்ணதாசனிடம்  ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் பணக்கார  நண்பரொருவர் வைத்திருந்த வெளிநாட்டுக்கார் மீது கண்ணதாசனுக்கு ஓர் காதல். 

நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதைக் கேள்விப்பட்ட கவிஞர், 

அதைத் தனக்கே தரவேண்டுமென்று விலையும் பேசிவிட்டார். முழுப் பணமும் கொடுக்க கண்ணதாசனிடம் பணமில்லை. எனவே மூன்றில் ஒரு பங்கு பணம் அப்போதே தருவதாகவும், பாக்கியை விரைவில் தந்துவிடுவதாகவும் சொல்ல நண்பரும் சம்மதித்தார். 


அது முதல் கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே கனவு காணத் துவங்கினார். மறுநாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து வருவதாக ஏற்பாடு.


ஆனால் முதல் நாள் அந்த நண்பரின் மற்ற நண்பர்கள் சிலர், ‘கண்ணதாசன் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப மோசமென்றும், அவருக்கு ஊரைச் சுற்றி நிறைய கடன் இருப்பதாகவும், எனவே நண்பரின் பாக்கிப் பணம் வசூலாவது கடினம்’ என்றும் சொல்ல நண்பர் உஷாரானார்.


மறுநாள் காலை கவிஞர் குளித்து, உணவருந்திவிட்டு, வண்டியை எடுத்து வர தன் ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குச் செல்ல, நண்பரோ குண்டைத் தூக்கிப் போட்டார்.


 ‘அந்த கார் தனக்கு ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் விருப்பமில்லை’ என்றும் கூற,...


 


கவிஞர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். தான் ஆசைப்பட்டு தனதாகவே நினைத்திருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் மனதில் தங்கியிருந்தது.


அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு, இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்த ‘பணக்கார குடும்பம்’ படத்துக்கு ஒரு சோகப் பாடல் எழுத அமர்ந்த கவிஞருக்கு அன்று காலை நடந்த சம்பவம் மனதைக் குடைய, பல்லவியை இப்படி துவங்கினார்…


பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக - நான் 

பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக...


படித்ததில்

பிடித்தது

Enninaivugalin e pathivu

 கவிமொழி


கவியரசர்

கண்ணதாசனிடம்  ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் பணக்கார  நண்பரொருவர் வைத்திருந்த வெளிநாட்டுக்கார் மீது கண்ணதாசனுக்கு ஓர் காதல். 

நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதைக் கேள்விப்பட்ட கவிஞர், 

அதைத் தனக்கே தரவேண்டுமென்று விலையும் பேசிவிட்டார். முழுப் பணமும் கொடுக்க கண்ணதாசனிடம் பணமில்லை. எனவே மூன்றில் ஒரு பங்கு பணம் அப்போதே தருவதாகவும், பாக்கியை விரைவில் தந்துவிடுவதாகவும் சொல்ல நண்பரும் சம்மதித்தார். 


அது முதல் கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே கனவு காணத் துவங்கினார். மறுநாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து வருவதாக ஏற்பாடு.


ஆனால் முதல் நாள் அந்த நண்பரின் மற்ற நண்பர்கள் சிலர், ‘கண்ணதாசன் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப மோசமென்றும், அவருக்கு ஊரைச் சுற்றி நிறைய கடன் இருப்பதாகவும், எனவே நண்பரின் பாக்கிப் பணம் வசூலாவது கடினம்’ என்றும் சொல்ல நண்பர் உஷாரானார்.


மறுநாள் காலை கவிஞர் குளித்து, உணவருந்திவிட்டு, வண்டியை எடுத்து வர தன் ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குச் செல்ல, நண்பரோ குண்டைத் தூக்கிப் போட்டார்.


 ‘அந்த கார் தனக்கு ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் விருப்பமில்லை’ என்றும் கூற,...


 


கவிஞர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். தான் ஆசைப்பட்டு தனதாகவே நினைத்திருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் மனதில் தங்கியிருந்தது.


அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு, இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்த ‘பணக்கார குடும்பம்’ படத்துக்கு ஒரு சோகப் பாடல் எழுத அமர்ந்த கவிஞருக்கு அன்று காலை நடந்த சம்பவம் மனதைக் குடைய, பல்லவியை இப்படி துவங்கினார்…


பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக - நான் 

பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக...


படித்ததில்

பிடித்தது

Enninaivugalin e pathivu

 நான் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் ஓர் இடத்தில் வேலை பார்த்தபோது, அது எழுபத்தைந்து ஆகாதா என்று ஏங்கினேன்; ஆயிற்று.


ஆயிரம் வராதா என்று அமைதி இழந்து கேட்டது மனது; அதுவும் வந்தது.


அது லட்சம் வரை போயிற்று; அப்போதும் நிம்மதி இல்லை.


வந்த ஏதும் தங்கவில்லை.


‘செல்வம் என்பது செல்வதற்காக வருவதுதான் என்று முடிவு கொண்டேன்.


பொருளைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், ‘வருவதும் வரும், போவது போகும்’ என்று சமநோக்குமுடிவு கொண்டேன், அந்த வகையில் நிம்மதி வந்தது.


ஆனால், லௌகீக வாழ்க்கையில் ஒரு நிம்மதி வரும்போது, ஒருதுன்பமும் கூட வருகிறதே. என்ன செய்ய?


பேதலித்த மனத்தைப் பார்த்து, ‘நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா?” என்று அழுதேன்.


‘இரண்டு மனம் வேண்டும் ‘ என்று இறைவனைக் கேட்டேன்.


உபதேசத்தில் இறங்கியிருக்கும் எனக்கே இன்னும் முழு நிம்மதி கிட்டவில்லை.


பகவத் கீதையின் தியானயோகம் என்னை செம்மைப்படுத்தி வருகிறது.


என்றோ ஒரு நாள் சாகப்போகிறோம். செத்த பிணத்தின் முன் இனி, சாகப்போகும் பிணங்கள் கதறி அழப்போகின்றன.


வீடு வரை உறவு


வீதி வரை மனைவி


காடுவரை பிள்ளை


கடைசி வரை யரோ?.


-ஆம்; கதை ஒருநாள் முடியப்போகிறது.


சிலர் அழுது முடிக்கப்போகிறார்கள்!


பிறகு எல்லோரும் மறந்துவிடப் போகிறார்கள்


கீதையில் கண்ணன் சொல்வது போல் எதிலும் சமநோக்கு ஏற்படும் நிலை வந்தால்தான், மனநிம்மதி சாத்தியமாகும்.


எனது வாழ்க்கையிலேயே இதற்கான அனுபவங்கள் உண்டு.


முதலில் நான் மனதாரக் காதலித்த பெண் எனக்குக் கிடைக்கவில்லை.


நான் கவலைப்பட்டேன்.


நிம்மதி இழுந்தேன்.


பிறகு திருமணம் பேசும்போது, நான் குறிப்பிட்ட பெண் எனக்குக் கிடைக்கவில்லை.


நான் மீண்டும் நம்பிக்கை இழந்தேன்.


‘விரும்பியது கிடைக்காததால், கிடைத்ததை விரும்புய என்ற பழமொழிபடி கிடைத்ததை விரும்பத் தொடங்கி, செயற்கையான நிம்மதியைத் தேடிக்கொண்டேன்.


கண்ணதாசன்

Enninaivugalin e pathivu

 கண்ணதாசனும்

ஆங்கில புலமையும்,,,


சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர் திரு.வி.பி.ராமன் என்ற வழக்கறிஞர். மிகச் சிறந்த திறமைசாலி. தன்னுடைய சில வழக்குகள் விஷயமாக அவரை சந்திக்க செல்வார் கவியரசு கண்ணதாசன். வழக்கறிஞரின் மனைவி நன்கு படித்தவர். 


ஆங்கில அறிவு உள்ளவர். ஒரு முறை கவிஞர் வழக்கறிஞரைச் சந்திக்க சென்ற போது கதவு மூடியிருந்தது. யாரோ வெளியில் நிற்பதறிந்து


 "ஹூ இஸ் தட்" (Who is that)

 என்று ஆங்கிலத்தில் கேட்டார் வக்கீலின் மனைவி .


"ஆன் அவுட் ஸ்டாண்டிங் பொயட் இஸ் ஸ்டாண்டிங் அவுட் (An outstanding poet is Standing Out) 


என்று பதில் கொடுத்தார் கவிஞர் கண்ணதாசன். 


வெளியில் வந்த வக்கீல் மனைவி "பரவாயில்லையே, தமிழில் தான் கவிதை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். ஆங்கிலத்திலும் புலமை உள்ளதே" என்று வியந்தார். 


அப்போது அவர் தான் படித்த ஆங்கில கவிதையின் இரண்டு வரிகள் தன்னை மிகவும் கவர்ந்ததாக கவியரசரிடம் அதை கூறினார். 


அந்தக் கவிதையில், போரிலிருந்து திரும்பிய ராணு வீரன் போர்க்களத்தையே நினைத்து தூங்காமல் அங்கு மிங்கும் நடந்து கொண்டிருந்தான். 


தன் கணவனை படுக்கக் சொல்லிவிட்டு இந்த வரிகளைக் கூறினாராம் ராணுவ வீரனின் மனைவி .


"ஸ்லீப் யுவர் ஐஸ்....ரெஸ்ட் யுவர்ஹார்ட்" 

(Sleep your eyes , Rest your heart)


என்பதே அந்த வரிகள்.கவிஞரின் மனதில் அந்த வரிகள் மிக ஆழமாகப் பதிந்தது. அந்த நேரத்தில் ஒரு படத்திற்கு பாடல் ஒன்று எழுத வேண்டி வந்தது.


அவரது மனதில் பதிந்த அந்த வரிகள் அன்றைய படத்தின் சூழலுக்கு தக்கவாறு இருந்ததால் அப்படியே பாடலாக வெளிப்பட்டன.


தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும

Enninaivugalin e pathivu

 நாம் - முதல் தலைமுறை

ததை + தாய் - இரண்டாம் 

தலைமுறை

பாட்டன் + பாட்டி - மூன்றாம் 

தலைமுறை

பூட்டன் + பூட்டி - நான்காம் 

தலைமுறை

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் 

தலைமுறை

சோயோன் + சேயோள் - ஆறாம் 

தலைமுறை

பரன் + பரை - ஏழாம் ஏழாம் 

தலைமுறை

பரன் + பரை - பரம்பரை

ஒரு தலைமுறை - சராசரியாக 60 

வருடங்கள் என்று கொண்டால், ஏழு 

தலைமுறை - 480 வருடங்கள்.

ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..

(கிட்டதட்ட ஆயிரம் வருடங்கள்) 

ஆக, பரம்பரை பரம்பரையாக என்று 

சொல்வதன் பொருள் ஈரேழு, 

பதினான்கு தலைமுறையாக என்று 

பொருள் வரும்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி 

உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் 

சிறப்பு!..