Friday, November 20, 2020

Enninaivugalin epathivu.sulunthi vemarsanam

 சுளுந்தீ படித்தேன். இரா.முத்துநாகு அவர்களின் உள்ளே எரியும் தீயின் குறியீடே சுளுந்தீ..


எழுத்தாளர் ,பத்திரிக்கையாளர் , என பன்முக  திறமை கொண்ட நூலாசிரியரின் மனதோடிய கதை ஓட்டமாய்  ஓடுகிறது இல்லை இல்லை எரிகிறது இச்சுளுந்தீயும் .
 
தமிழர்களின் வாழ்வியலையும், அரசியலையும் கலாசாரத்தை கண் முன்னே நிறுத்தி இருப்பதோடு எழுத்துக்களால் நம்மை நிமிர்த்தியும் இருக்கிறார்.
 
இந்தநூலைப்படிப்பதால் நாம் நிலவியல்,நாட்டுமருத்துவம்,
தாவிரவியல்,விலங்கியல்,வட்டார வழக்காற்றியல், என பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம். 
 
ஒரு தொல்குடி சமூகத்தின், குறிப்பாக பண்டுவ சமுகத்தின் ஆவணமாக கொள்ள வேண்டிய வரலாற்று நாவல், வட்டார நாவல், அரசியல் நாவல், உளவியல் நாவல், ஆவண நாவல் என அனைத்தையும் உள்ளடக்கிய பொக்கிஷம் இந்த நாவல். 
 
 
ஒரு சவரக்கத்தியின் மூலம்  சாம்ராஜியத்தை வீழ்த்த முடியும் என அழகாக கூறியிருக்கிறார்.
 
குல நீக்கம் எனும் பெயரில்நசுக்கப்படுவதும்,சுரண்டப்படுவதும்,உரிமைகள் இழந்து வறுமையில் உழல்வதும் என பல வரலாற்று உண்மைகள் நிறைந்த கதை.
 
 கடுமையான உழைப்பு இல்லாமல் கண்டிப்பாக இப்படி ஒரு நூலை படைக்க முடியாது.
 
சுளுந்து இது, ஒரு மரத்தின் பெயர். இதை எரிபொருளாகவும் இன்றளவிலும் மின்சாரமில்லா பகுதிகளில், கடலில் மீனவர்கள் இரவு நேரங்களில் தீவெட்டியாக பயன்படுத்தும் ஒரு வகையான மரம். 
ஆசிரியர் இதை வழிகாட்டும் வெளிச்சமாகவும், ஆதிக்க உணர்வுக்கு எதிராக எரியும் நெருப்பாகவும் , ஒடுக்கப்பட்டோரின் வாழ்விற்குரிய போர் ஆயுதமாகவும் இந்த நாவலில் கூறியுள்ளார். 
சுளுந்தீ என்ற குச்சி போல சாதி தீ இந்த நாவல் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 

ஒரு நாவிதனைச் சுற்றியே முழு நாவலும் பயணிக்கிறது. ஒரு நாவிதன் படை வீரன் ஆக முடியுமா ?என்ற ஒற்றை அடிநாதமே மொத்த நாவலின் கரு.
 
 
 
ராமன், அரண்மனையார் கதிரியப்ப நாயக்கர் மற்றும் தளபதிக்கும் சவரம் செய்யும் நாவிதன். அதோடு பன்றிமலை சித்தரிடம் உதவியாளராக இருந்து மருந்து தயாரிக்கவும் கற்றுக் கொண்டவன். அதனால் சுற்று வட்டாரம் முழுவதும் பல்வேறுபட்ட உடல் உபாதைகளுக்கு மருத்துவமும் பார்த்து வந்தான். 

அந்த காலகட்டத்தில் நாவிதம் செய்பவர்களுக்கு மட்டுமே நிரந்தரமாக கத்தி வைத்திருக்கும் உரிமை இருந்து இருக்கிறது.
 
அரண்மனையாருக்கு ஒற்றர்கள் மூலம் வரும் செய்தியை ஆராய்ந்து அரசுக்கு எதிராக பயணிப்பவர்கள் நாவிதர்கள் மூலமாக யாருக்கும் தெரியாமல் கொலை செய்ய உத்தரவும் தருவார்கள்.
 
 

 
பன்றிமலை சித்தருக்கு நல்ல வைத்தியப் பணி செய்ததற்கு ஒரு குதிரையை காணிக்கையாக வருகிறது. அந்த குதிரையை சித்தர் ராமருக்கு கொடுக்கிறார்.  ராமர் அதை வளர்த்து தனது மகன் மாடனுக்கு கொடுக்கிறார்
 
 
தனது மகன் மாடனை வீரனாகி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான் ராமன். அவனுக்கு பண்டுவத்தையும், குதிரை ஏற்றம், மல்யுத்தம், வாள் சுற்றுதல், ஈட்டி எறிதல் போன்ற பலவிதமான பயிற்சிகளை யாருக்கும் தெரியாமல் கமுக்கமாய் சொல்லித்தந்து வீரனுக்கு உரிய பல தகுதிகளை கற்றுத் தருகிறான் ராமன். தன்னைப்போல் ஊழியம் பார்க்காது வீரனாக வர வேண்டும் என்ற அதீத ஆசையில் ராமன் அனைத்தையும் கற்றுத் தருகிறான்.
 
 
ராமன் தனது மகனுக்கு வீரத்தை மட்டுமல்லாது முகச்சவரம் எவ்வாறு செய்ய வேண்டும், இடைசவரம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை மகனுக்கு சொல்லித் தரும் இடங்கள் அனைத்திலும் ராமன் குருவாக மாறி மிளிருவார்.
 

மாடன் ராமனை போல் அல்லாது சிறிது முரண்டு பிடித்தவன் ஆகவும், கோபக்காரானாகவும், சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் தன்மை இல்லாது வளர்ந்தது ராமனுக்கு அச்சத்தைத் தந்தது. ராமனும் பண்டுவம் மருந்து தயாரிக்கும் பொழுது இறந்துவிடுகிறான். 

மாடன் அரண்மனை பண்டுவனாக நியமிக்கப்பட தளபதியின் கோபம் உச்சத்துக்கு செல்கிறது. ஊரே எதிர்த்த போதும் தாய் தடுத்த போதும் குதிரையிலேயே மிரட்டும் வீரனாக மாடன் வலம் வருகிறான். 

மாடன் தனது வீரத்தோடு போட்டி போட வீரர்கள் யாரும் உண்டா என்று சவால் விடுகிறான் சின்ன கதிரியப்ப நாயக்கரிடம். இங்கே தளபதியின் சூழ்ச்சியால் மாடனுக்கு மக்களிடையே எதிர்ப்பலை கிளம்புகிறது. இறுதியில் தந்தையின் விருப்பத்தின்படி வீரனாக மாடன் ஆனானா? இல்லையா? என்பதே மீதிக்கதை.  
 
ஆதிக்க சாதியும், அதிகார பீடமும், அடித்தட்டு மக்களை, கலவர பூமியின் வெறித்தனத்தோடுஅலைக்கழித்து பந்தாடி மகிழ்ந்ததை, வெளிச்சமிட்டு 
அம்பலப்படுத்துகிறதுசுளிந்தீ. 
 
அரண்மனைக்குள் நடக்கும் பதவிப் போட்டியில் சவரக் கத்தி 
அந்தப்புரப் போர்க்கருவியானது!
 
 
பாளையம் என்ற சொல் உருது என்ற வார்த்தையிலிருந்து பிறந்து வந்தது என்ற புதிய செய்தி வியப்பைத் தந்தது. 
 
இதில் வரும் கதாபாத்திரங்கள் எத்தனை எத்தனை. இத்தனை கதாபாத்திரங்களையும் எந்தவித குழப்பமும் இல்லாமல் சொல்லியிருப்பது ஆசிரியரின் உழைப்பையும், இதற்காக அவர் மெனக்கெட்டு இருப்பதையும் இந்த நாவல் படிக்கும் பொழுது காண முடிகிறது.
 
ஒவ்வொரு பக்கங்களும் விசித்திரங்களையும் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் கொண்ட பக்கங்கள் சுளுந்தீ, உள்வாங்கி அந்த காலகட்டத்திற்கு சென்று அலைபாய வைத்தது.

 
நாவலில் வரும் தீக்கொழுத்தி, சித்தவர, குறுக்கம், கல்லுபித்தன், தொம்பரை, போடவு, சிலேப்பம், கல்பாசம், வாடன், ஏகாளி, சீந்திக்கொடி, கருங்கொடி, ராசபிலவை, கைசிரங்கை, பச்சநாவி, சேங்கொட்டை, வாய்கூடு, தாம்பு, சாங்கியம், தோதகத்தி, கடைக்கன்னி, குங்கிலியம், செந்தூரம், கடம்பம், வேப்லாளை, சக்களத்தி மூலிகை, இந்துப்பு, கல்மதம், கோரன்கிழங்கு, முக்குருணி, வராகம், குருசடி, அனல் வாதம், புனல் வாதம், நாம்பல், வாவி, காதவெளி, கூவகை, போதையிலை இப்படி நாம் கேள்விப்பட்ட, கேள்விப்படாத, தெரிந்தும் மறந்துபோன நூற்றுக்கணக்கான வார்த்தைகளை ஆசிரியர் சொல்லிருக்கும் அழகு நம்மை பிரமிக்கவைக்கிறது.
 
ஏராளமான சொலவடைகளையும் இந்த நூலில் 
நிரவிக் கிடக்கிறது. 
 
 
 
ஈத்தரக் கழுதை,  வெங்கம்பய,  எடுபட்ட பய போன்ற வழக்கொழிந்து போன 
 சாதாரண வட்டார வழக்கு சொற்களின் உண்மை யான அர்த்தங்கள் படிப்பவரை அதிர்சிக்குள்ளாக்குகிறது. 


 
நாவுதர்களின் கத்தியைக் கொண்டு எப்படி சாம்ராஜ்யங்கள் வீழ்தத்ப்படுகின்றன. தமிழர்களின் சடங்குகளை செய்து வந்த நாவிதர்கள், செம்மான்,போன்றவர்களின் இடத்தை பார்ப்பனர்களும் ஆரியர்களும் எப்படி பிடித்துக்கொண்டார்கள். உழுது விவசாயம் பார்த்த இடையர்களும் குடும்பர்களும் எப்படி நிலத்தை இழந்தார்கள் என்பதையும் ஒரு வரலாற்றுப் பின்னணியுடன் ஒரு சரியான தகவலை பதிவு செய்திருக்கிறார்.



 அழுக்கு துணியில் இன்னாருடையது என தெரிய குறியிடும் சாயம் கருத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். சேங்கொட்டையை இளந்தீயில் வாட்டி தண்ணீரில் குளிர வைத்தால் ஓட்டுக்குள் உள்ள விதை உருகி எண்ணெய் போல் வழ வழப்பாக வரும்

 ஈக்குச்சியால் சாயத்தை தொட்டு அழுக்கு துணியில் குறியிடுவர்.துணி கிழிந்தாலும் சாயக்குறி மட்டும் அழியவே அழியாது..
அனுபவத்தில் கண்ட உண்மை.எங்கள் வீட்டுத்துணிகளில் சிறு பிள்ளையாக இருக்கும் போது பார்த்திருக்கிறேன்..ஆனால் தயாரிப்பு இதே முறையா என  தெரியாது.
 
துணிகளை வெளுக்க வெள்ளாவியில் அடுக்குவதில் குல வாரியாக 
கீழிருந்து மேலாக உழைக்கும் மக்களின் துணிகளை அடியிலிருந்து 
அடுக்கி வருவது வர்க்க ரீதியான சமூக அமைப்பை அடையாளப் 
படுத்துகிறது. 


அனந்த வல்லியை மாடன் கொட்டகையில் பார்த்த பொன்னையன் புளுங்கும் இடம்.நாவிதனுக்கு வந்த வாழ்வை பாருடா.அவளோ பேரழகி.மூக்கு ஒன்னறை அங்குலம்,வாய் ரெண்டரை அங்குலம்,முத்தாலம்மனுக்கு மாதிரி கண்,பச்சை காடை இறகு போல புருவம்,சிரிச்சா கன்னம் இரண்டும் சிறுமுகடு மாதிரி இருக்கும்.சீரங்கம் கோயில் பெல்லால சிலை மாதிரி இருக்கா என புலம்புவான்

மிக மெல்லிய வெளிப்படையாக சொல்லப்படாத ஒரு தலைக் காதல் அனந்தவல்லி காதல்.மனதால் வரிந்து கொண்ட மாடனின் இறப்பிற்கு பின் தன்னை விதவையாக ஆக்கிக் கொண்ட இடம் நிகழ்ச்சி..தினமும்மாடனுக்கும்,கண் தெரியாத அவன் தாய்க்கும்  மோர் சாதம் கொடுத்து  வந்திருப்பாள்..கடைசியில் அவள் நிலை பாவம்.

ஆட்சி என்பதே சூழ்ச்சி தான்.என்பது ஒவ்வொரு  நிகழ்ச்சியிலும் தெள்ள தெளிவாக தெரிகிறது.

கதை முழுதும் சுளுந்தீ வெளிச்சம் காட்டிக் கொண்டே வருகிறது.சில நேரங்களில் சுடராக,சித்தருடன் ராமனிருக்கும் காலங்களில்,சில நேரங்களில் கை விளக்காக,ராமன் தன் மகன் மாடனுக்கு கற்பிக்கும் இடங்கள்,அழித்தொழிக்கும் ஆயுதமாக பெருமாள் தளபதிக்கு சவரம் செய்யும் இடம் ,சில நேரங்களில்  காட்டு தீயாக வங்காரன்,மாடன் சண்டைக் காட்சிகள் என.நாவல் முழுதும் சுளுந்தீ அணையாமல் எரிகிறது.அருமை.நன்றி ஆசிரியர் இரா.முத்துநாகு அவர்களுக்கு

No comments:

Post a Comment