Tuesday, July 31, 2012

en ninaivugalin e -pathivu -childcare inside the home

வீட்டில் குழந்தையைத் தனியே விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையெனில் பாதுகாப்பு விஷயங்களில் அதிக கவனம் எடுத்து சொல்லிக் கொடுங்கள்.
முக்கியமாக வீட்டுக் கதவுகளையெல்லாம் பத்திரமாகப் பூட்டி வைக்கச் சொல்லுங்கள். யாரேனும் வந்துக் கதவைத் தட்டினால் என்ன செய்ய வேண்டும் ? தெரியாத நபர் எனில் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றையெல்லா தெளிவாகச் சொல்லுங்கள்.
வீட்டில் போன் அடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக வீட்டில் குழந்தை தனியே இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது ! . “நீங்க யாரு, டாடி கிட்டே என்ன சொல்லணும்..” என கேட்க குழந்தைகளைப் பழக்குங்கள்.
வீட்டுக்குப் போன் செய்து அடிக்கடி விசாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டில் குழந்தைகள் தனியே இருந்தால் அவர்கள் தண்ணீர், மின்சாரம், நெருப்பு போன்ற ஆபத்துகள் கூட நேரலாம். எனவே அது குறித்த பாதுகாப்பு அம்சங்களையும் சொல்லிக் கொடுங்கள் !


லைட்டர் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வேளை வீட்டில் தீ பிடித்தால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் எங்கேயாவது ஒளிந்து கொள்ளவே முயலும் என்பது உளவியல் பாடம் !
உடையில் தீ பிடித்தால் ஓடக்கூடாது ! தண்ணீர் ஊற்றவேண்டும், இல்லையேல் தரையில் புரளவேண்டும் ! எரிந்து கொண்டிருக்கும் வீட்டுக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக் கூடாது, அப்போது மின் உபகரணங்கள் எதையும் தொடக் கூடாது. இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சீரியல் பார்த்துக் கொண்டே, “மூணு விசில் வந்துச்சுன்னு நெனைக்கிறேன். பாப்பா அந்த அடுப்பை அணைச்சு வை” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். சிரமம் பார்க்காமல் அத்தகைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். சமையலறை, கியாஸ் பக்கத்தில் குழந்தைகளை அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது !

வீட்டில் கொசு, பூச்சி, கரப்பான் போன்றவையெல்லாம் வராமல் இருப்பதற்காக நீங்கள் வாங்கி அடிப்பீர்களே ஹிட் போன்ற சமாச்சாரங்கள்,
இத்தகைய ஸ்ப்ரேயை குழந்தைகள் தெரியாமல் முகத்தில் அடித்து உள்ளிழுத்தால் அவர்களுடைய மூளை நேரடியாகவே பாதிக்கப்படும். சுய நினைவு இல்லாமல் விழுந்து விடுவார்கள். எவ்வளவு சுவாசிக்கிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த பாதிப்பு அதிகமாகும்.
எனவே ஹிட் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளின் கண்களுக்கே எட்டாத இடத்தில் வைத்து விடுங்கள்.  அதே போல பாத்ரூம் கிளீனிங் பொருட்கள், பாத்திரம் கழுவும் பொருட்கள் போன்றவற்றையும் தூரமாகவே வையுங்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் கெமிகல் பொருட்கள், நச்சுப் பொருட்கள் போன்ற சர்வ சங்கதிகளும் குழந்தைகளால் எடுக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் !

குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் கவனம் தேவை. ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்கு சின்னச் சின்ன பாகங்கள் உடைய விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் அவற்றை வாயில் போட்டு ஆபத்தை விலைக்கு வாங்கி விடலாம். அந்தந்த வயதினருக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களையே வாங்குங்கள் !
அதே போல தரம் குறைந்த விஷத் தன்மையுடைய பெயிண்டிங், மாலை போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கித் தராதீர்கள். அது அவர்களுக்கு அலர்ஜி போன்ற நோய்களைத் தந்து விடும்.
விளையாட்டுப் பொருட்கள் உடைந்து சுக்கு நூறானபின்னும் அதை ஒரு கோணியில் கட்டி வீட்டிலேயே வைத்திருக்கும் தவறைச் செய்யாதீர்கள். உடைந்த பொம்மைகளையும், விளையாட்டுப் பொருட்களையும் தூரப் போடுங்கள்.
குழந்தைகள் விளையாடும் இடத்தில் கூட அவர்களுக்குக் காயம் தரக்கூடிய கூர்மையான பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிடுங்கள். குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருட்கள் மீதான கவனத்தை விட, விளையாட்டே பிரதானமாய் தெரியும். எனவே அவை ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

குழந்தைகள் மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது ரொம்பவே கவனம் தேவை. என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக் கூடாது ? என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அடிக்கடி அவற்றை குழந்தைகளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருங்கள். குறிப்பாக பிளக் பாயின்ட் போன்றவற்றுக்கு ஒரு கவர் வாங்கி  மாட்டுங்கள் !
வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், ஃபிரிட்ஜ் போன்றவற்றையெல்லாம் குழந்தைகள் கையாள விடாதீர்கள். மின் பொருட்களில் எப்போதுமே ஆபத்து ஒளிந்திருக்கும். எனவே வெகு சில ஆபத்தற்ற மின் உபகரணங்களைத் தவிர வேறு எதையும் குழந்தைகள் தொட அனுமதிக்காதீர்கள்.
மின்சாரத்தில் இருக்கின்ற ஆபத்துகளைக் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே சொல்லிப் புரிய வைக்கலாம். லைட்டும், சுவிட்சும் விளையாட்டுப் பொருட்களல்ல என்பது அவர்களுக்கு மழலை வயதிலேயே புரிய வேண்டியது அவசியம்.

நமது வீடு குழந்தைக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டியது நமது கடமை. குறிப்பாக மாடிப் படிகள், பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். பாதுகாப்பு இல்லை என தோன்றினால் கிரில், கதவு, வலை என தேவையானவற்றைப் போட்டு பாதுகாப்பாக்கிக் கொள்ள வேண்டும்.
ஷேவிங் செட் போன்றவற்றை பத்திரமாய் வைத்திருப்பது, அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை பாதுகாப்பாய் வைப்பது, குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வது என வீட்டுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்.
டிவி, கனமான பொருட்கள், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை குழந்தை இழுத்துத் தள்ளாத வகையில் இருக்க வேண்டும். ஒரு மேஜை விரிப்பின் முனை கூட கீழே தொங்காமல் இருப்பது நலம். அப்படி இல்லையேல் மேஜை விரிப்பே இல்லாமல் இருப்பது நல்லது !
கத்தி, பிளேடு, அரிவாள் போன்ற விஷயங்களெல்லாம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ரொம்ப ரொம்ப பாதுகாப்பான இடத்தில் இருக்கட்டும். தவறி விழாத இடத்தில், குழந்தையால் எடுக்க முடியாத இடத்தில் அவற்றை வையுங்கள். மாத்திரைகள், மருந்துகள் போன்ற சமாச்சாரங்களும் டிராக்களில் பூட்டப்பட்டே இருக்கட்டும் !
சின்னச் சின்ன இத்தகைய விஷயங்களில் பெரிய பெரிய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.



குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் விஷயத்தில் பலரும் டாக்டர்களாகி விடுவார்கள்.  அப்படி ஆகாமல் இருப்பது குழந்தைக்கும், நமக்கும் ரொம்ப நல்லது. சரியான நேரத்தில் டாக்டரிடம் போக வேண்டியதும், அவருடைய அறிவுரைப்படி நடக்க வேண்டியதும் ரொம்ப அவசியம். 50% பெற்றோரும் டாக்டர் சொல்வது பாதி புரியாமல் தான் டாக்டரின் அறையை விட்டு வெளியே வருகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. டாக்டர் சொல்வதை முதலில் தெளிவாய் கேளுங்கள்.
“கடைசி நாள்” அதாவது எக்ஸ்பயரி டேட் என்ன என்பதை கவனமாய் பாருங்கள். கவரிலும், பாட்டிலிலும் ஒரே நாள் இருக்கிறதா என்றும் பாருங்கள். பழைய மருந்துகளை வாங்கவே வாங்காதீர்கள். அது பழையதாகி விட்டது என மருந்து கடைக் காரரிடமும் சொல்லி விடுங்கள். காலாவதியான மருந்துகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் !
மருந்தை எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் மருத்துவர் அறிவுரைப்படியே கேளுங்கள். அதிக காய்ச்சலா இருக்கு என ரெண்டு மாத்திரை எக்ஸ்ட்ராவாய்க் கொடுக்காதீர்கள். அது ஆபத்தானது !.
“இந்த மருந்து இல்லை, இதே மாதிரி இன்னொரு மருந்து இருக்கு” என கண்ணி வலை விரிக்கும் மருந்து கடைக்காரர்களிடம் ஏமாற வேண்டாம். நிறைய லாபம் பார்க்க விரும்பும் பலரும் சொல்லும் டயலாக் இது ! எந்த மருந்தை டாக்டர் சொல்கிறாரோ அதையே வாங்குங்கள் !
பழைய மருந்துகளை கொடுப்பது, ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை இன்னொரு குழந்தைக்கும் கொடுப்பது இப்படியெல்லாம் நீங்களே டாக்டராய் மாறி குழந்தையின் வாழ்வோடு விளையாடாதீங்க !


தண்ணீர் இன்னொரு டேஞ்சர் விஷயம். குறிப்பாக சின்னப் பிள்ளைகள் உள்ள இடங்களில் தண்ணீர் ரொம்ப ஆபத்து. குழந்தைகளைத் தனியே எக்காரணம் கொண்டும் நீச்சல் குளம், குளம், குட்டை, ஏரி, கடல் போன்ற எந்த இடத்திலும் விடாதீர்கள்.  உங்கள் நேரடிப் பாதுகாப்பு நிச்சயம் தேவை.
வீடுகளிலும் ரொம்ப சின்னப் பிள்ளைகள் இருந்தால் கவனம் இரண்டு மடங்கு வேண்டும். பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தால் குழந்தை அதைத் திறக்க முடியாதபடி வையுங்கள். அல்லது அந்த அறையைப் பூட்டியே வையுங்கள். முடிந்தவரை குடம் போன்ற வாய் குறுகலான பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வையுங்கள்.
குழந்தைகள் தண்ணீரில் விளையாட அதிக ஆர்வம் காட்டும். ஆனால் தவழும் பிள்ளைகளுக்கு ஆபத்தை விளைவிக்க ஒரு பக்கெட் தண்ணீரே போதுமானது. எனவே கவனம் அவசியம்.


இப்போதெல்லாம் சின்ன வயதிலேயே சிறுவர் சிறுமியர் இன்டர்நெட் விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். இணையம் அவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லித் தரும். அதே நேரத்தில் தேவையற்ற பல விஷயங்களையும் அது கற்றுத் தரும். எனவே குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கவனிப்பது, வரையறுப்பதும் பெற்றோரின் கடமையாகும்.
இணையத்தில் சொந்தப் புகைப்படமோ, குடும்பத்தினரின் புகைப்படமோ அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையான தகவல்களை இணையப் பக்கங்களில் போட்டு வைக்க வேண்டாம். எக்காரணம் கொண்டும் இணைய நண்பர்களை தனியே நேரில் சந்திக்க வேண்டாம் எனும் அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
தவறான இணையப் பக்கங்கள், தேவையற்ற சேட் தளங்கள் போன்றவற்றை அனுமதிக்காமல் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இணையத்துக்கு என ஒதுக்குங்கள். இரவு நேரத்தில் இணையத்தில் உலவுவதை தடை செய்யுங்கள். இப்போதெல்லாம் குழந்தையின் மனசையும், பாதுகாப்பையும் பலவீனப்படுத்துபவை இணையத்திலேயே உண்டு !


சின்ன வயதுப் பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று பாலியல் ரீதியான தொந்தரவுகள். இதை “குட் டச், பேட் டச்” என்பார்கள். நல்ல தொடுதல் எது, மோசமான தொடுதல் எது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக மிக முக்கியம் !
குழந்தைகளைக் கொஞ்சுவது போல தொடுவது, விளையாட்டு எனும் போர்வையில் வக்கிரம் காட்டுவது இவையெல்லாம் எங்கும் நடக்கும் விஷயங்கள். 72.1 சதவீதம் குழந்தைகள் இதைப்பற்றி யாரிடமும் சொல்வதில்லை. காரணம் பல குழந்தைகளுக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இரண்டாவது காரணம், இந்த தொல்லைகளையெல்லாம் தருவது 90% குழந்தைக்குத் தெரிந்த நபர்களே என்கின்றன புள்ளி விவரங்கள்.
வளரும்போ குழந்தைக்கு எல்லாம் புரியும் என்று விட்டு விடுவது ரொம்பவே ஆபத்தானது. ஒரு குழந்தை மூன்று வயதைத் தாண்டினாலே அதனிடம் மோசமான தொடுதல் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம் ! மிக முக்கியமாக ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குமே இதைச் சொல்லிக் கொடுங்கள் ! ஆபத்து இருவருக்குமே உண்டு !

யாராய் இருந்தாலும் சரி, புடிக்காத விஷயங்களுக்கு “நோ” சொல்லப் பழக்க வேண்டும். குழந்தைகள் நெருங்கிய சொந்தக்காரர்களிடம் “நோ” சொல்லத் தயங்கும். குறிப்பாக கொஞ்சம் வயதில் பெரியவர்களிடம் அவர்களுடைய தயக்கம் அதிகமாக இருக்கும். அதைப் போக்க வேண்டும். தப்பாக யாரேனும் தொட முயற்சி செய்தால் “தொடாதே..” என அழுத்தமாகவும், சத்தமாகவும் சொல்லப் பழக்க வேண்டும். குழந்தை சத்தமாகச் சொன்னால் அதன் பின்னர் அந்த நபரால் தொந்தரவு எற்படும் வாய்ப்பு ரொம்பக் கம்மி !

குழந்தைங்க சொல்வதை பெற்றோர் முழுமையாய் நம்ப வேண்டும். குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். அதுவும் பாலியல் விஷயங்களில் இட்டுக் கட்டி எதையும் சொல்லவே மாட்டார்கள். எனவே குழந்தைகள் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். குழந்தை பேசி முடிக்கும் வரை இடை மறிக்காதீர்கள்.
“சே..சே.. அந்தத் தாத்தா அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு… “, “அந்த மாமா ரொம்ப நல்லவரு, அவரைப் பற்றி தப்பா நினைக்காதே” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். குழந்தை அசௌகரியமாய் உணரும் நபர்களிடம் குழந்தையை தனியே இருக்க விடாதீர்கள். அது ரொம்ப முக்கியம்.


குழந்தைகள் கிட்டே நடந்த விஷயங்களையெல்லாம் தினமும் கேக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பள்ளியில் நடந்த விஷயங்களானாலும் சரி. சொந்தக்காரங்க வீட்டில் நடந்த விஷயமானாலும் சரி, எல்லாவற்றையும் கேளுங்கள். உங்கள் கள்ளம் கபடமற்ற மழலைகள் உண்மையைச் சொல்வார்கள்.
ஒருவேளை விரும்பத் தகாத நிகழ்வு நடந்திருந்தால் கூட பதட்டத்தை வெளிக்காட்டாமல் பேசுங்கள். எந்தத் தவறுக்கும் உங்கள் குழந்தை காரணமல்ல என்பது நினைவில் இருக்கட்டும்.

எதுன்னாலும் மம்மி கிட்டே தயங்காம சொல்லலாம் எனும் நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் குழந்தையோடு இயல்பான அன்பை வைத்திருக்க வேண்டியது தான். எரிச்சல், கோபம் காட்டும் பெற்றோரிடம் குழந்தைகள் உண்மையை மறைக்கும்.














No comments:

Post a Comment