Monday, October 9, 2017

Enninaivugalin epathivu...story

அமெரிக்காவை அலற வைத்த அப்துல் ஹமீது.!

1965-ல் நடந்தஇந்தியா,பாக் போர், டாங்கிகளிடையே நடந்த தாக்குதல்களுக்குப் பிரசித்தி பெற்றது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 471 பேட்டன் டாங்கிகள் அழிக்கப்பட்டு, பலது கைப்பற்றப்பட்ட சம்பவம் உலக இராணுவ வரலாற்றில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.

போர்முனையில் நடந்த அனைத்து மோதல்களிலும் 'அசல் உத்தர்' என்று குறிப்பிட்ட தாக்குதல் மிகப் பிரசித்தி பெற்றது. அத்தாக்குதலின் எதிரொலியாகவே பாகிஸ்தானின் பல பேட்டன் டாங்கிகள் கைப்பற்றப் பட்டன. போரில் சிதைக்கப்பட்ட டாங்கிகள் பல, போர் முடிந்த பின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தார்ன் தரன் (Tarn Taran) மாவட்டத்தில் உள்ள கேம்கரண் என்ற ஊரில் குவிக்கப்பட்டன. 'பாக் டாங்குகளின் கல்லறை' என்றும், 'பேட்டன் நகர்' என்றும் அந்த ஏரியாவுக்குப் பெயர் சூட்டி, இந்திய இராணுவத்தினரின் வீரத்துக்குச் சாட்சியாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
யுத்தத்தில் 'அசல் உத்தர்' என்றால்... அது அசல் தியாகிகளின் சாதனையாகத்தானே இருக்க முடியும்? இங்கேயும் இருந்தார் ஒரு தியாகி... அவர்தான் ஹவில்தார் அப்துல் ஹமீது. அவருடைய வீரத்தாக்குதல்தான் போரின் திசையையே மாற்றி விட்டது. எது பாகிஸ்தானின் வலிமை என்று அவர்கள் இறுமாந்திருந்தார்களோ... அதைத் தகர்த்தெறிந்தவர் ஹவில்தார் அப்துல் ஹமீது!

அவருடைய மிக நுணுக்கமான பார்வை, படுதந்திரமான தாக்குதல் முறை, பாகிஸ்தானை மட்டுமல்ல... அமெரிக்காவையே அலற வைத்து விட்டது.
மாவீரன் அப்துல் ஹமீது, ஜூலை 1, 1933 அன்று உத்திரப்பிரதேச மாநிலம், தாமுப்பூர் என்ற கிராமத்தில் உஸ்மான் ஃபரூக்கி என்ற ஓர் ஏழை போலிஸ்காரரின் மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த பின், இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். 1954-ம் ஆண்டு கிரெனெடியர்ஸ் படைப் பிரிவில் சேர்க்கப் பட்டு, பதவி உயர்வு பெற்று, ஹவில்தார் (ஏட்டு) அந்தஸ்தில் அவர் பணி புரிந்து வந்த நிலையில்தான் 1965-ல் யுத்தம் வெடித்தது. பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த முதல் சிறப்பு ஆயுதப் படைப் பிரிவின் திட்டம் - பஞ்சாப் மாநிலத்தின் தார்ன்தரன் மாவட்டத்தின் உள்ளே ஊடுருவித் தாக்கி, தங்கள் பேட்டன் டாங்கிகளின் வலிமையினால் விறுவிறுவென முன்னேறுவது! அமெரிக்காவின் பெருமைக்குரிய தயாரிப்பான பேட்டன் டாங்கிகள் பலநூறு அணிவகுத்துச் செல்ல, பல்லாயிரம் போர்வீரர்களுடன் தாக்குதலை ஆரம்பித்தது பாகிஸ்தான்.

சரியாகச் சொல்வதானால், 'அசல் உத்தர்' என்ற அந்த சாதனைத் தாக்குதல் செப்டம்பர் 6-ம் தேதி அரங்கேறியது. அப்துல் ஹமீது பங்கு பெற்றிருந்த கிரெனெடியர்ஸ் பிரிவு முதலில் நடுங்கித்தான் போனது. பாகிஸ்தான் இராணுவ பேட்டன் டாங்கிகள் அப்படியொரு குண்டு மழை பொழிந்தன. எங்கும் வெடிச்சத்தம் பயங்கரமாக எதிரொலித்தது. நமது படையினரால், பழைய ஷர்மன் டாங்கிகளைக் கொண்டு தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கேம்கரண் டவுன் பாகிஸ்தான் படையின் வசமானது. எதிரிப் படையினர் மெதுவாக கேம்கரணிலிருந்து சீமா கிராமத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்தனர். நிலைகுலைந்து போயிருந்த நம் படைவீரர்களுக்கு உற்சாகம் தரும் குரலாக ஒலித்தது அப்துல் ஹமீதின் அழைப்பு! "ம்... ம்... வாருங்கள்... அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தாக்குதலைப் பதிலடியாகத் தரப் போகிறோம்" என்று கூறிக்கொண்டே தம் ஜீப்பில் ஏறிப் பாய்ந்தார் ஹமீது. சற்றுத் தயக்கத்துடன்தான் பின்தொடர்ந்தனர் அவரது படைப்பிரிவினர்.

புராணக் கதைகளில் நாம் கேட்டிருப்போம் - எத்தனை பெரிய வீரனுக்கும் எங்கேனும் ஓரிடத்தில் பலவீனம் இருக்குமென்று! கிருஷ்ணனுக்குக் கால் விரலில், கிரேக்க மாவீரன் அக்கிலஸுக்குக் குதிகாலில் என்றெல்லாம் உதாரணங்கள் உண்டு. சர்வ வல்லமை பொருந்தியதாகக் கருதப்பட்ட அமெரிக்கத் தயாரிப்பு பேட்டன் டாங்கிகளுக்கு அந்தப் பலவீனம் அவற்றின் பினபுறத்தில் இருந்தது. அவற்றின் பினபுறத் தடுப்புத் தகடு அத்தனை உறுதியாக இல்லாமல், மெல்லியதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அந்தப் பலவீனத்தை எப்படியோ கண்டறிந்து விட்ட அப்துல் ஹமீது, அந்த டாங்கிகளைப் பின்புறமிருந்து தாக்கத் திட்டமிட்டார்.

எதிர்பார்த்தபடியே பின்புறம் போயும் ஆயிற்று... "ட... ட... ட... ட...டுமீல்!" பயங்கர சத்தத்துடன் பேட்டன் டாங்கி வெடிக்கிறது. அத்தனை நவீன டாங்கி, இப்படி 'பிஸ்கோத்து'த் துப்பாக்கித் தோட்டாவுக்கே வெடித்து விடுகிறதே எனத் திகைத்துப் போகிறார்கள் நம் வீரர்கள். ஹமீது மீண்டும் சுடுகிறார்.
"ட... ட... ட... ட...டுமீல்!" இன்னொரு டாங்கி அவுட்.

இப்படியே 9 பேட்டன் டாங்கிகளைத் தனி மனிதராகச் சுட்டு அழித்தார் ஹமீது.
எதிரிகள் திக்குமுக்காடித்தான் போனார்கள். டாங்கிகளை மெதுவாக ரோட்டை விட்டு வயல் வெளியில் இறக்கி அப்படியே பின்வாங்க நினைத்தனர்.
அமெரிக்காவின் ஆயுத நவீனத்தனத்தை நினைத்து நினைத்து அந்த டாங்கிகளை அதுவரை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்த இந்திய வீரர்களுக்கு, இப்படி அவற்றைக் கொசு போலத் தனி மனிதராக அப்துல் ஹமீது நசுக்கியது ஏகமாகவே உசுப்பிவிட்டது. இழந்த நம்பிக்கையை முழுதாகத் திரும்பப் பெற்றவர்களாக ஆக்ரோஷத்துடன் தாக்குதலைத் தொடர்ந்தனர் அவர்கள்.

இந்திய இராணுவத்தால் அந்த இடத்தில அழிக்கப்பட்ட 97 பாகிஸ்தானிய டாங்கிகளில் 9 டாங்கிகள் அப்துல் ஹமீது என்ற தனி ஒரு வீரனால் அழிக்கப்பட்டது.

திரும்ப எத்தனித்து வயல்வெளிகளில் இறங்கிய பேட்டன் டாங்கிகளோ, சேற்றில் சிக்கிக் கொண்டு நகர மறுத்தன. பதில் தாக்குதலைத் தொடர்ந்த இந்தியப் படையினர் கோழியை அமுக்குவது போல் அவற்றைச் சுற்றி வளைத்துப் பிடித்து அழித்தனர்.

ஆனால், அப்துல் ஹமீது என்ற அந்த மாவீரனின் வீரத் தாக்குதல் வெகுநேரம் நீடிக்கவில்லை. பின் வாங்கி ஓடிய பாகிஸ்தான் படையினரின் பீரங்கித் தாக்குதலில், உடல் துளைக்கப்பட்டு அவர் வீர மரணமடைந்தார்.

தமது தனி மனித வீரதீரத்தால், ஒரு யுத்தத்தின் நிலையையும், ஒரு நாட்டின் சரித்திரத்தையும் தம் உயிரைக் கொடுத்து மாற்றி எழுதி விட்டார் அப்துல் ஹமீது. வீரத் தியாகியான அப்துல் ஹமீதுக்கு பாரத நாட்டின் உயரிய வீரப்பதக்கமான 'பரம்வீர் சக்ரா' வழங்கப்பட்டது.அமெரிக்கா பேட்டன் டாங்கி தயாரிப்பை 1966ல் முற்றிலுமாக நிறுத்தியது.!இந்த வரலாற்று தோல்வியை பார்த்து கொண்டிருந்த ஒரு இளம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பின்னாளில் ஆட்சியை பிடித்தார்.அவர் பர்வேஷ் முஸ்ரப்! அந்த வெஞ்சினம் கார்கிலில் வெளிப்பட்டு தோல்வியை தழுவியது வரலாறு.

அப்துல் ஹமீதுக்கு இந்திய அரசு பரம் வீர் சக்ரா விருது அளித்து பெருமைப்படுத்தியது.

ஜெய்ஹிந்த் அப்துல் ஹமீது.
இந்த மாவீரனின் வீர வரலாற்றை முடிந்தால் ஷேர் பண்ணுங்க.
🇮🇳ஜெய்️ஹிந்த் 🇮🇳
️🇮🇳வந்தே️ மாதரம்🇮🇳️

-இந்திய இராணுவச் செய்திகள்.*


செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்ற முருகன் பாட்டு*

ஒரு புலவர் காளமேகத்திடம் கேட்டார்.
“ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?”

“முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்றார் காளமேகம்.

”வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்”
என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.

என்ன கொடுமை? இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா?

அதை தகும் என்றும் , முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்.

இப்படி .....

செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமாறே "

*செரு* என்றால் போர்க்களம்.
*செருப்புக்கு* என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.
அப்படி போர்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம்.
குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.
*விளக்குமாறு* என்பதற்கு விளக்கம் , சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.....?

இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.....!

No comments:

Post a Comment